Author: Karthik Janartham

  • The Divine Compassion of Śiva: Ācāryas Revealing the Essence of Vedas and Āgamas through Tirumurai and Meykanda Śāstras

    The Divine Compassion of Śiva: Ācāryas Revealing the Essence of Vedas and Āgamas through Tirumurai and Meykanda Śāstras


    TaHiEnFrEs

    ஸ்ரீமத் வேதாகமங்களைக் கற்றுத் தெளிந்துணர, ஒருவனுடைய முழு ஆயுட்காலமும் போதாதபடி, அவை அளவாற் பெருகியிருக்கின்றனவாதலின், கருணைக்கடலாகிய சிவபெருமான், நம்மீது வைத்த பெருங்கருணையினால், சமயக்குரவர்களும், சந்தான குரவர்களும் ஆகிய ஆசாரிய மூர்த்திகளை இந்நிலவுலகில் அவதரிக்கச் செய்து, அவர்கள் வாயிலாகத் திருமுறைகளையும் மெய்கண்ட நூல்களையும் வேதாகம சாரமாக நமக்கு வழங்கியருளினார். இவ்வருளாசிரியன்மார்கள், சீவபோதம் கழன்று சிவபோதமயமாகி நின்றவர்கள் ஆதலின், இவர்களது திருவாக்கு நம்மனைய பசுவாக்குகள் போலாகாது, பதிவாக்காகவே கொள்ளப்பெறும்.

    தருமையாதீனப் புலவர் வயிநாகரம் திரு.வே. இராமநாதன் செட்டியார் அவர்கள் ‘திருமுறைகளும் மெய்கண்ட நூல்களும்’ என்னும் தலைப்பில் வரைந்த கட்டுரையின் ஒரு பகுதி…

  • The Metaphysics of Śiva’s Immanence and Transcendence: Vyāpti, Sakalatva, and Asangatva

    The Metaphysics of Śiva’s Immanence and Transcendence: Vyāpti, Sakalatva, and Asangatva


    TaHiEnFrEs

    மாணவன் : இறைவன் என்னோடு ஒன்றாய் வேறாய் உடனாய் இருக்கிறான் எனில் நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களையும் சிவபெருமானும் அனுபவிப்பானா?

    ஆச்சாரியர் : மாணவனே !
    உன் வயிற்றில் எத்தனையோ புழு பூச்சிகள் கிடந்து உழலுகின்றன.

    அந்த புழு முதலிய சிற்றுயிர்கள் அடைகிற இன்ப துன்பங்களை உன்னுடைய வினைப்பயன் என்று நீ எந்தக் காலத்திலாவது கருதி இருக்கிறாயா ?
    கருதுவது இல்லை தானே?

    அந்த சிற்றுயிர்கள் படும் இன்ப துன்பங்களை நீ அனுபவிப்பது உண்டா ? இல்லை தானே ?

    அது போலத்தான் இறைவனும்.

    சிவ வியாபகத்தின் கீழ் உள்ள உயிர்கள் அனுபவிக்கிற இன்ப துன்பங்களை சிவபெருமான் ஒரு பொழுதும் தான் அனுபவிப்பதில்லை.

    அவன் உயிர்களோடு ஒன்றாய் வேறாய் உடனாய் இருக்கிறான்.

    உயிருக்கு உயிராய் இருந்து உயிர்களைப் பிரிப்பின்றிக் கூடி நிற்கின்றான்.

    ஆயினும் அவற்றின் தன்மை அவனை பற்றாதவாறு நிற்பதால் உயிர்களது இன்ப துன்ப வாதனைகள் எவற்றையும் சிவபெருமான் பற்றுவது இல்லை என்று அறிவாயாக.

    இப்படியாக இறைவன் பற்றற்றவனாய் இருக்கிறான் என்று திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் தனது திருக்களிற்றுப்படியார் எனும் மெய்கண்ட சாத்திரத்தின் 87 ஆவது பாடலில் விளக்கியருளிச் செய்திருக்கிறார்.

    அப்பாடல்,

    உன்னுதரத் தேகிடந்த கீடம் உறுவதெல்லாம்
    உன்னுடைய தென்னாய்நீ உற்றனையோ – மன்னுயிர்கள்
    அவ்வகையே காண்இங் கழிவதுவும் ஆவதுவும்
    செவ்வகையே நின்றசிவன் பால்.

    நன்றி : மாபாடிய உரைவகுப்புக்குழு.

  • The Spiritual Importance of Śiva’s Abodes

    The Spiritual Importance of Śiva’s Abodes


    TaHiEnFrEs

    சிவபெருமான் அநேக ஸ்தலங்களில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கிறதற்குக் காரணமென்ன?

    தேசங்கள் பலவாயிருப்பதனால் அவ்வாறு திருக்கோயில் கொண்டிராவிட்டால் மனிதர்களுக்குச் சிவதரிசனஞ் சித்திப்பது அரிது. பார்வதிதேவியார் பரமசிவத்தை நோக்கிப் பலவிடங்களில் திருக்கோயில் கொண்டு விற்றிருப்ப தென்னவென்று வினவினகாலத்துத் தேசங்கள் தோறும் பரவியிருக்கும் புண்ணியான்மாக்கள் அங்கங்குத் தரிசிக்கும் பொருட்டாக வீற்றிருப்பதாகப் சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.

    சிவபுண்ணியமுண்டாவதற் கேதுவாகிய சிவஸ்தலங்களின்னவென்று எவ்வாறு தெரியும்?

    சைவபுராணத்தில் உள்ள ஸ்தலபுராணங்களினாலும் தேவாரப்பதிகங்களினாலும் தெரியும்.

    ஸ்தலமென்பது தெய்வத்தை வணங்குவதற்கான ஓரிடந்தானே, சிவஸ்தலங்களின் விசேஷமென்னை?

    இவை ஏனைய மதஸ்தர்கள் தங்களிஷ்டப்படிக் கட்டுகின்ற கோயில்போலன்றாம். ஒவ்வொரு ஸ்தலமும் மானதபூஜையின் உண்மையை விளக்கிச் சிவஞானத்தையுண்டாக்குங் கருவியாயிருத்தலையறிக. அவ்வாறே உத்ஸவங்களும் பஞ்சகிருத்தியங்களை யுணர்த்துவனவாம்.

    சைவவினாவிடை நூலில் உள்ள ஸ்தலவியல் பகுதியில் இருந்து…

  • Exploring the Meaning and Benefits of Śrī Pañcākṣara Recitation

    Exploring the Meaning and Benefits of Śrī Pañcākṣara Recitation


    TaHiEnFrEs

    ஸ்ரீ பஞ்சாக்ஷர செபத்தாற் பயன் என்ன?


    ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தின் பொருளை அறிந்து, சிவபெருமான் ஆண்டவன், தான் அடிமையென்னு முறைமையை மனத்தகத்தே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித்துக் கொண்டுவரின், விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தாற் போல, ஆன்மாவினிடத்தே சிவபெருமான் பிரகாசித்து, மும்மலங்களும் நீங்கும்படி ஞானானந்தத்தைப் பிரசாதித்தருளுவர்.

    சிவபெருமானை ஆன்மாக்கள் வழிபடும் இடங்கள் எவை?


    சிவபெருமான், புறத்தே சிவலிங்க முதலிய திருமேனிகளும் குருவுஞ் சங்கமமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், ஆன்மாக்கள் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், ஆன்மாக்கள் அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம்.

    சிவபெருமான் இவ்விடங்களின் நிற்பர் என்றது அவர் எங்கும் வியாபகர் என்றதனோடு மாறுபடுமன்றோ?


    மாறுபடாது; சிவபெருமான், எங்கும் வியாபகமாய் நிற்பினும், இவ்விடங்களின் மாத்திரமே தயிரில் நெய் போல விளங்கி நிற்பர்; மற்றை இடங்களிலெல்லாம் பாலில் நெய் போல வெளிப்படாது நிற்பர்.

    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் இயற்றிய சைவவினாவிடை தொகுப்பு என்னும் நூலில் இருந்து…

  • Śiva as Aṣṭamūrti: The Eightfold Manifestation

    Śiva as Aṣṭamūrti: The Eightfold Manifestation


    TaHiEnFrEs

    சிவபெருமான் அஷ்டமூர்த்தி :

    நமது சமய ஆசாரிய சுவாமிகளான ஸ்ரீமத் மாணிக்கவாசகப்பெருமான் அருளிய திருவாசகத்தில்,

    நிலம்நீர் நெருப்புயிர்
    நீள்விசும்பு நிலாப்பகலோன்
    புலனாய மைந்தனோ
    டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்
    உலகே ழெனத்திசை
    பத்தெனத்தான் ஒருவனுமே
    பலவாகி நின்றவா
    தோணோக்கம் ஆடாமோ

    திருத்தோணோக்கம் – 5.

    சிவபெருமான் ஒருவனே, நிலமும், நீரும் தீயும், வாயுவும், பெரிய ஆகாயமும், சந்திரனும் சூரியனும், அறிவுருவாய ஆன்மாவும் என்னும் எட்டு வகைப் பொருள்களாய் அவற்றோடு கலந்து இருப்பவனாய் ஏழுலகங்களும் திக்குகள் பத்தும் ஆகப் பல பொருள்களாக நின்றருளுகின்றான்.

    உயிர் – காற்று. விசும்பு – ஆகாயம். நிலா – சந்திரன். பகலோன் – சூரியன். புலன் – புலம்; அறிவு; போலி. ஆன்மாவை, மைந்தன் என்றார், புருடன் என்னும் வடநூல் வழக்குப்பற்றி. ஐம்பூதம், இருசுடர், ஆன்மா என்னும் எட்டும் இறைவனுக்கு, அட்ட மூர்த்தம் – எட்டுரு எனப்படுதலின், எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் என்று அருளினார்.

    மற்றொரு சமயாசாரியரான திருநாவுக்கரசர் பெருமானும் இவ்வாறே,

    இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாய்எறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாய்அட்ட மூர்த்தி யாகி (தி.6 ப.94 பா.1) என்று அருளிச்செய்தல் காண்க. `

    ஈறாய்முத லொன்றாய்இரு பெண்ஆண்குணம் மூன்றாய்
    மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்
    ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
    வேறாய்உடன் ஆனான்இடம் வீழிம்மிழ லையே.

    என்ற மற்றொரு சமயாசாரியரான திருஞானசம்பந்தப்பெருமான் திருமொழியை (தி.1 ப.11 பா.2) இங்கு உடன்வைத்து நோக்குக.

    ” ப்ருதிவ்யோ பவ; ஆபச்சர்வ; அக்நேருத்ர; வாயுர்ப்பீம; ஆகாஸஸ்ய மஹாதேவ; சூர்யஸ்ய உக்ர; சந்த்ரஸ்ய சோம; ஆத்மாந; பசுபதி: “

  • The Establishment of Faiths: A Reflection of Śiva’s Divine Compassion

    The Establishment of Faiths: A Reflection of Śiva’s Divine Compassion


    TaHiEnFrEs

    சிவபெருமான்,

    அநாதிகாலத்தில் சமயங்களைச் சிருஷ்டிக்குங்கால் பல சமயங்களைக் கற்பிப்பானேன்?

    ஒரு பள்ளியில் கற்கும் மாணாக்கர்கள் பிறப்பினால் ஒரு தன்மையராயினும் அறிவில் தீவிர, மந்த பேதவிளக்கத்தினால் பல வேறுபாடுடையராய் பல வகுப்பினராய் பிரித்து, அவைகளுக்கேற்ப நுட்பமாயும், பருப்பொருளாகவும் கல்வியைப் பலவிதப்படுத்தி கற்பித்தல் போல மனிதர் பிறப்பினால் ஒரு தன்மையராயினும் பக்குவ பேதம் காரணமாக தீவிரமாகவும் மந்தமாகவும் விளங்கும் அறிவின் தாரதம்மிய விளக்கமுடையராய் இருத்தலின், கிருபாசமுத்திரமாகிய சிவபெருமான் அவரவர் பக்குவ முறைப்படி நுண்பொருள் உடையனவாகவும் பருப்பொருள் உடையனவாகவும் சமயங்கள் பல நிறுத்தியதெனவாகும்.இங்கனம் செய்தல் குற்றமாகாது என்க.

    இச்சமயங்களில் நிற்பவர், அவைகள் சொல்லும் அறங்களை வழுவாது அனுட்டிப்பின், அந்த அனுஷ்டான பலத்தினால்,அதனினும் மேல் சமயம் சார்ந்து, அதிற்கூறிய ஞான சாதனங்களைக் கடைப்பிடித்து, பரமுத்தி அடைவதற்கு வழியாகும்.

    திருவாவடுதுறை ஆதீன வெளியீடான உலகத்தோற்றம்(1951) என்னும் நூலில் இருந்து…

  • Bhaktirasa Stuti: In Praise of Tiruchendur Murugan

    Bhaktirasa Stuti: In Praise of Tiruchendur Murugan


    TaHiEnFrEs

    சீரேறுஞ் செந்தில்வளர் கந்தநாதா
    சிவகுருவே பரஞானச்சுடர் மாமணியே
    பாரேறுங்கீர்த்தி கொண்டறுமாமுகவா
    பாவைகுற வள்ளி தெய்வானை ரமணா
    நீரேறுங் கார்மேனி வண்ணன்மருகா
    நிர்மல பொற்காந்தி திருபன்னீர் புயனே
    மாரேறுந்துய்ய வெண்மலர் தாரணியும்
    மங்களனே நவநீதன் யெனையாள்வாயே.

    அண்டர்களினிடாகற்றக் கருணையோடு
    அவதரித்துமசுரர் குலமறுத்ததீரா
    எண்டிசையுஞ் செங்கோலைச் செலுத்தும் நீதா
    யேழை யென்மனதிலிசைகுடி கொண்டோனே தொண்டனெனைச்சூழ்ந்தமிடிருணபந்தத்தைத்
    தோணியதை நீக்கி பரிபாலித்தாள
    விண்டிடு மென்பண்டு வினைத்தீதறுப்பாய் விமலனே நின்றுணை கைப்பற்றினேனே.

    திருச்செந்தூர் முருகன் புகழ்கீர்த்தனம். (பக்திரஸமான துதி)(1912)

    ஸ்ரீவில்லிபுத்தூர் டிஸ்டிரிக்ட்டு முன்சீப்பு கோர்ட்டு அமீனா திரு என். எஸ். நவநீதகிருஷ்ணய்யரவர்களால் இயற்றப்பெற்றது.

  • The Significance of Rudrākṣa Dāna

    The Significance of Rudrākṣa Dāna


    TaHiEnFrEs

    || மதுமாமிசம் புசிப்பவர்க்கு ருத்ராக்ஷ தானம் செய்தலாகாது ||

    உருத்திராக்க தானம் . 

    சிவனடியராயுள்ளார்க்கு உருத்திராக்க மாலையை யாவது , மணியையாவது தானஞ் செய்தல் சொல்ல வொண்ணாப் பரம புண்ணியம் ஆகும் . சுத்த வித்தைகளிலே சொல்லப்பட்ட துலாபுருட தானம் , இரணிய கருப்பதானம் பிரமாண்ட தானம் , இரணிய கற்பகதானம் , அட்டோத்தர சகத்திர கோதானம் , இரணிய விடபதானம் , இரணிய வசுவதானம் , இரணிய கன்னிகா தானம் , இரணிய துவாரபாலக தானம் , சொர்ண ரத தானம் , பஞ்சலாங்கல தானம் , சுவர்ண பூமி தானம் , கற்பகலதா தானம் , இரத்தின தேனு தானம் , பொற்கும்ப தானம் , சுவர்ண கணபதி தானம் , விட்டுணு விம்ப தானம் , திலபதும தானம் , திலபருவத தானம் , திலதேனு தானம் , இலக்குமி தானம் , அன்னதானம் , சுவர்ண தானம் , வித்தியா தானம் , சிவிகா தானம் , கவிகா தானம் , பாதரக்ஷாநி முதலிய த னங்கள் எவற்றினும் இது மிக விசேடமுடையது . உருத்திராக்க தானத்திற்கு ஒப்பாகவாவது உயர்வாகவாவது வேறோர் தான முளதென நினைத்தலும் மகாபாவம்.தானஞ் செய்வார்அன்புடனே செய்க . மதுமாமிச பக்ஷணமுடையார், சிவ தீக்ஷையில்லார் , தூர்த்தர் முதலிய அசற்பாத்திரர்க்குத் தானஞ் செய்தலாகா.சற்பாத்திர முடையார்க்குத் தானஞ் செய்தவர் இருவினையி னின்றும் நீங்கிச் சிவசாலோக்கிய முத்தியையடைந்து , அங்கிருந்தவாறே  சிவபெருமானோடு இரண்டறக் கலத்தலாகிய சிவசாயுச்சிய முத்தியை யடைவர் . 

    பெருந்திரட்டு . 

    துலைப்புருட முதலாகச் சுத்தவித்தை கிளக்குபல தூய தானக் 

    கிலையிதன்ற னிலேசமென வெண்ணியா னடியவர்க்கிங் கியன்ற கண்டீ 

    யலைவின்றிப் பத்தியுடன் கொடுப்பரே லவர்முத்திக் கருக ரிந்த 

    மலைவகற்றுந் தானமொரு பாத்திரர்க்கே செய்வதென மறைகள் பேசும் .

    யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி சைவசித்தாந்தசரபம் சைவத்திரு நா.கதிரைவேற் பிள்ளை இயற்றிய சைவபூஷண சந்திரிகை என்னும் நூலில் இருந்து…

  • The Cosmic Role of Śiva

    The Cosmic Role of Śiva


    TaHiEnFrEs

    சிவபெருமான் அடியவர்‌ அல்லலை அறுப்பவன்‌. இதனைச்‌ “சிறந்தடியார்‌ சிந்தனையுள்‌ தேனூறிநின்று, பிறந்த பிறப்பறுக்கும்‌ எங்கள்‌ பெருமான்‌” என்று திரு மணிவாசகப்பெருமான்‌ அருளிச்‌ செய்துள்ளார்‌. இச்செய்தியைக் கலித்தொகை

    “ஆறறி அந்தணர்க்‌ கருமறை பலபகர்ந்து
    தேறுநீர்‌ சடைக்‌ கரந்து திரிபுரந்‌ தீமடுத்துக்‌
    கூறாமல்‌ குறித்ததன்மேல்‌ செல்லும்‌ கடுங்கூளி
    மாறாப்போர்‌ மணிமிடற்‌ றெண்கையாய்‌ கேளினி”
    (கடவுள்‌ வாழ்த்து)

    என்று கூறுகின்றது. நான்முகனுக்கு நான்கு மக்கள்‌. சனகர்‌, சனந்தனர்‌, சனாதனர்‌, சனற்குமரர்‌ என்பார்‌. நால்வரும்‌ நற்‌ கலை பல கற்றும்‌ வீடுறுநெறியை விளக்கமாகக்‌ கண்டிலர்‌. எனவே சிவபிரானை அணுகினர்‌. அவன்‌ வாக்கிறந்த பூரணமாய்‌ மனத்துக்கப்பாலாய்‌ எல்லாமாய்‌ உள்ளதுமாய்‌ உள்ள பொருளை உணர்த்தினான்‌. அதனை எவ்வாறு உணர்த்தினான்‌? கரதலம்‌ மோன முத்திரையைக்‌ காட்டிச்‌ சொல்லாமல்‌ சொல்லியருளினான்‌. இதனையே

    “ஆறறி அந்தணர்க்‌ கருமறை பலபகர்ந்து” என்றது. மதங்கொண்ட யானை யாவற்றையும்‌ அழிவு பண்‌ணும். அதைவயப்படுத்திப்‌ பயிற்சி தந்தால்‌ மக்கட்‌ பணிகளைச்‌ செய்யும்‌. அதுபோலக்‌ கங்கையாறு வீறுகொண்டு பாய்ந்தால்‌ உலகம்‌ நீறுபடும்‌. அதை துளியாக்கிச்‌ சடையிலே கரந்து அதன்‌ வீறு ஒழித்து நிலவுலகிற்‌ பாய்ந்து நலம்‌ பல விளையச்‌ செய்தான் பரமன்‌.

    சிவபிரானே சருவ சங்காரகருத்தா என்பதைச் சரப உபநிடதம்‌ “யோந்தகாலே ஸர்வலோகாந்‌ ஜஹாரஸ ஏக ச்ரேஷ்டச்சஸர்வ” என்று கூறும்‌.

    அடைந்தவர்க்கு அளி செய்‌யும்‌ அண்ணல்‌ அரன்‌, அதனையே நீலமணியொத்த அவனது மிடறு காட்டி நிற்கும்‌. கடலின்‌ தோன்றிய நஞ்சை எம்பிரான்‌ உண்டு உலகைக்‌ காவானேல்‌ யாவரும்‌ அழிந்திருப்பர்‌, இதனை

    “பூரரோடும்‌ விண்ணோர்கள்‌ பறந்தோடப்‌ புரந்தரனார்‌ பதி விட்டோடத்‌ தேரோடும்‌ கதிரோட மதியோட விதியோடத்‌ திருமால்‌ மேனிக்‌ காரோடத்‌ தொடர்ந்தோடும்‌ கடல்விடத்தைப்‌ பரமனுண்டு காவா விட்டால்‌ ஆரோடும்‌ நீரிருப்பீர்‌ எங்கோடியுயிர்‌ பிழைப்பீர்‌ அறிவிலீர்காள்‌?”

    என்று திருக்குற்றாலத் தலபுராணம்‌ கூறும்‌.

    சிவஞான பூஜா மலரில்(1988) இருந்து…

  • Divine Epithets of Arunachaleshvara

    Divine Epithets of Arunachaleshvara


    TaHiEnFrEs

    திருவண்ணாமலை திருத்தலத்திற்குரிய திருநாமங்கள் : –

    அருணாசலம் , அருணகிரி , அருணாத்ரி , சோணாசலம் , சோணகிரி , சோணாத்ரி , சிவலோகம் , சுத்தநகரம் , கௌரிநகரம் , ஞானநகரம் , தக்ஷிணகைலாசம் , தேசுநகரம் , முக்திநகரம் , வாயு நகரம் , ஸ்தலைச்வரம் , அருணாபுரி , திருவருணை , திருவ ண்ணாமலை என்னும் இத்திருநாமங்கள் முக்தியடைய இச்சிப்பவர்கள் எக்காலத்திலும் இடைவிடாது சிந்திப்பதற்குரிய இனிய திருநாமங்களாம் .

    திருவண்ணாமலை க்ஷேத்திர மூர்த்திக்குரிய திருநாமங்கள் : –

    அருணாசலேசன் , சோணாசலேசன் , அருணகிரீசன் , சோணாத்ரீசன் , அம்ருதேசானன் , பக்தபாச விமோசகன் , முகராங்க்ரிபதி , ம்ருகமதேசுவரன் , கௌரீசன் , ஸ்படிகாசலன் , ஞானசம்பந்தநாதன் , வேதமூர்த்தி , ஸித்தராஜன் , க்ஷமாரூபி , பால மூர்த்தி , திகம்பரன் , சர்வவித்யேச்வரன் , அருணன் , ப்ரதக்ஷிணப்ரியன் , அக்ஷராக்ருதி , அனாதி , அந்தரகிதன் , பக்தஞானப்ரகன் , ஆச்சர்யவைபவன் , வாஞ்சிதகாயகன் , முக்திப்ரதன் , சுவயம்பு , மரகதாசலன் என்பனவாதி நாமங்கள் ஒருநாமம் ஓருருவமொன்றுமிலார்க்குரிய எண்ணிறந்த திருநாமங்களில் ஞானமடைய விரும்புமவர் அகத்தில் இடைவிடாது ஜபித்தற்குரிய சிந்தைக்கு அமுதமெனவினிய அருணேசரது புனித திருநாமங்களாம்.

    ஸ்ரீ ஸ்காந்த மஹாபுராணத்தில் உள்ள அருணாசல கண்டத்தில் ஸ்ரீ கௌதம முனிவர் ஸ்ரீ அருணாசலேஸ்வரப் பெருமானிடம், ‘சுவாமி! இந்த திவ்ய திருத்தலத்தில் தங்களுக்கு வழங்கப்படும் விஷேச திருநாமங்களைக் கூறியருளுக’ என்று கேட்க, அதற்கு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் அருளிய திவ்ய திருநாமங்கள்.