Author: Meykandar

  • The Role of Birth in Soul’s Liberation: A Saiddhāntika Explanation

    The Role of Birth in Soul’s Liberation: A Saiddhāntika Explanation


    TaHiEnFrEs

    கடவுள் உயிர்களுக்கு ஏன் பிறப்பைக் கொடுத்தார்? பிறப்பைக் கொடுக்காமல் இருந்தால் உயிர்கள் துன்பத்திற்கு ஆளாகாமல் இருந்திருக்குமே?

    உயிர்கள் அறிவுடையன. அவ்வறிவு அநாதியே – இயல்பாகவே ஆணவமல சத்தியால் மறைக்கப்பட்டிருந்தது.அறிவுடைய உயிர் சிவானந்தத்தைப் பெறுவதற்கு உரியது.அது சிவானந்தத்தைப் பெற முடியாமல் கிடக்கிறதே என்று உயிர்கள் மேல் பெருங்கருணை கொண்டு சிவபெருமான் உயிர்களுக்குப் பிறப்பைக் கொடுத்தார்.

    பிறப்பைக் கொடுக்காமல இருந்திருந்தால் உயிர்கள் ஆணவமல மறைப்பிலேயே கிடக்கும்.அதுவும் அதற்குத் துன்பந்தானே. துன்பம் என்று அறியாமலேயே துன்பத்துள் கிடப்பதும் துன்பமேயாகும்.

    கடவுள் கொடுத்த பிறப்பினால் துன்பம் மட்டும் உண்டாவது இல்லை.இன்ப அனுபவமும் கிடைக்கிறது.நல்வினை செய்யும் வாய்ப்பும் கிடைக்கிறது.ஆணவமல மறைப்பிலிருந்து படிப்படியாக மெல்ல மெல்ல – விடுதலை பெரும் வாய்ப்பும் கிடைக்கின்றது.ஆதலின் பிறப்பினால் உயிர்கள் துன்பத்திற்கு மட்டுமே ஆளாகின்றன என்று கூறுவதற்கு இடமில்லை.

    முனைவர் ரா.வையாபுரி இயற்றிய கடவுள் சில கேள்விகள் – உயிர் சில சிந்தனைகள்(கட்டுரைத் தொகுப்பு) என்னும் நூலில் இருந்து…

  • The Fourfold Path of Jñāna: A Saiddhāntika Perspective On The Nature of Liberation

    The Fourfold Path of Jñāna: A Saiddhāntika Perspective On The Nature of Liberation


    TaHiEnFrEs

    ஞானம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வகைப்படும். அறிதலொப்புமையால் நான்கும் ஞானமேயாம். ஆயினும் அரும்பு, மலர், காய், கனியாதல் போலச் சோபான முறையாகிய தம்முள் வேறுபாட்டான் முறையே ஒன்றற்கொன்று அதிகமாய் நான்காமெண்ணுக் கணின்ற ஞானமே முடிவாகிய ஞானமாம். இந்நான்கினும் அறிவு நுணுகி வர வர அறியாமையாகிய மலமும் அம்முறையே தேய்ந்து தேய்ந்து வரும். இவற்றின் பயனாகிய சாலோக முதலிய நான்கும் முத்தியேயாயினும் ஒன்றற்கொன்று ஏற்றமாய் இறுதிக்கணின்ற சாயுச்சியம் ஒன்றே முடிவாகிய முத்தியாகும்.

          மேற்கூறப்பெற்ற நான்கும் கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டை எனவும் பெயர் பெறும். ஞான நூல்களை ஞானசிரியன் பால் ஓதல் கேட்டல் பிறர்க்கு ஓதுவித்தல் கேட்பித்தல் என்பன கேட்டலாகும். தானும் உடனாயவரோடும் அப்பொருளைச் சிந்திப்பது சிந்தித்தலாம். இவ்வாறு கேட்ட காலத்து முதல்வனியல்பு பொருட்டன்மை பற்றிப் பேதமாய்த் தோன்றிச் சிந்தித்தகாலத்து அபேதமாய்த் தோன்றும். இவ்விரண்டுமின்றி நேரியனும் பரியனுமாயதோர் முறைமை பற்றி எவற்றினும் ஒற்றித்து நின்றே ஒன்றினும் பற்றிலனாய் வேறு தோன்றுவது தெளிதலாம். இவ்வாறு அவனோடு ஏகனாகி நிற்க ஏகதேசச் செலவு இன்றாய் ஒழியும். நிட்டையாவது கரணங்களின் வயத்தனாதலின்றி மேலங்ஙனந் தோன்றிய இறைவனது வியாபகத்தைத் தலைப்பட்டு ஒருவாற்றுனுங் குறைவின்றி இம்மையே சீவன்முத்தனாகி மாசுநீங்கிய வழி ஆடையின் வெண்மை ஆடை முழுதும் விளங்கினாற் போல, இங்குளி வாங்குங் கலம் போலுழல்வதாகிய இவ்வுடம்பு நீங்கப் பெறும் பரமுத்தி நிலையில், வியாபகமென்னும் அறிவு விளங்கப் பெற்று முதல்வனோடு ஒத்து நிற்பன் என்பதாம்.

          இவ்வாறு இருவினையொப்பால் சத்தமாதி விடயத் தன்னியன் பற்று நீங்கும். சத்திநிபாதத்தால் போக போக்கியக் கருவிகளின் செறிவு கழியும். குருவருளால் உருக்கழியும், தீக்ஷையால் சஞ்சித வினை கழியும். ஞான சாதனத்தால் எல்லா யோனிகளிலும் புக்குழல்தல் கழியும். ஞானப் பெருக்கத்தால் பாச அறிவிச்சை செயல்கள் கழியும். இறைவனது ஞான சத்தியால் அநாதி மறைப்பாகிய ஆணவமலமும் வாதனைபற்றி நிகழும் ஆகாமிய வினையும் ஒழியும். கிரியா சத்தியான சஞ்சித வினைக்குப் பற்றுக்கொடுத்து நிற்கும் முன்னிலையாகிய மாயேய மலமும் ஒழியும். உடம்பு முகந்து கொண்ட பிராரத்த கன்மம் அநுபவத்தால் ஒழியும். மும்மல நீக்கத்தால் ஏக தேசத் தன்மை கழியும். வாதனை நீக்கத்தால் விடயந் தன்னியன் நுகர்வது கழியும்.

    இவ்வாறு சகல உபாதிகளும் கழிந்து சிவஞானம் விளங்கப் பெற்று மாணிக்கத்தைச் சார்ந்த படிகம் மாணிக்கமாய் ஒழியாது, மாணிக்கத்தின் ஒளியும் நிறமும் பெற்றுத் தன் ஒளி அதுவதுவாயடங்கி அம்மாணிக்கத்திற்குச் சமமாய் நிற்குமாறு போலத்  தன் குணம் அவையேயாய் அடங்கிப் பரமான்மாவே போல ஒற்றித்து நின்று அப்பரமான்வே தனக்கு விடயமாக அயராவன்பு செய்து சிவாநந்த அநுபவம் பெற்று அந்நிலையிலும் மீளா அடிமையே என்று திருவருள் கண்ணாகத் (தன்முனைப்பின்றி) அநுபூதியிற் காண்பன்.

    ‘சித்தாந்த சைவம்’ என்னும் தலைப்பில் சித்தாந்த ஆசிரியர் சைவத்திரு த. சி. ச. இராமச்சங்கு பாண்டியன் ஐயா அவர்கள் வரைந்த கட்டுரையில் இருந்து ஒரு பகுதி…

  • Transcending the Cycle of Karma : Śiva’s Role in Destroying the Forest of Samsāra

    Transcending the Cycle of Karma : Śiva’s Role in Destroying the Forest of Samsāra


    TaHiEnFrEs

    அறம்பாவமென்னு மருங்கயிற்றாற்கட்டி = புண்ணிய பாவப்பயனென்னும் அரிய கயிற்றினாற்கட்டி.

    இதனால் பரமகருணாமூர்த்தியாகிய பரமேசுவரன் ஆணவவிருளில் அகப்பட்டுழலும் ஆன்மகோடிகளை ஆநந்தபரிதர்களாகச் செய்யத் திருவுளங்கொண்டு இருவினையென்னும் பாசக்கயிற்றினாற்கட்டி ஆட்டுவிக்கின்றானென்பதூஉம், அக்கட்டை அவிழ்க்கும்பேராற்றல் அவ்வமல பரமபதிக்கே இயல்பிலமைந்ததென்பதூஉம் பெறப்பட்டது.

    ஆகலின் எத்திறநற்பயனும் ஏகநாதனாகிய அம்புலியணிந்த பிரானருளாலன்றி ஆன்மாக்களுக்கு எக்காலத்தும் எவ்விடத்தும் அமையாதென்பது திண்ணம்.

    “இரு வினைப்பாசக்கயிற்றின் வழியாட்டுவிப்பானுமொருவனுண்டே தில்லையம்பலத்தே” என்றார் திருவெண்காட்டடிகள்.

    இவ்விரண்டு வினைப் பயன்களே ஒவ்வொரு ஆன்மாவையும் எந்தத்தநுவினும் நீங்காதுபற்றிப் பின்றொடர்ந்து செல்லுமாதலால் ” பற்றித்தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே” என்று மீளவும் அவரே வற்புறுத்தியரு ளினார்.
    சுவேதாசுவதர உபநிடதமும் “பராச்யாம்ச்ச சர்வர்ந் பரிணாமயேத்ய = பழைய வினைகளையெல்லாம் பக்குவப்பட்ட பருவத்துப் பரிணமிக்கும்படிச்செய்து அவைகளின் பயன்களையளிப்பான்.’ என்று கூறிப் போந்தது. அதனால் ஆன்மாக்களீட்டுஞ் சர்வகன்மங்களையும் அவரவர்களே ஏறாமலுங் குறையாமலும் புசிக்கும்படியூட்டி அவர்களுக்குச் சித்தசுத்தி பிறப்பித்து புலனொடுக்கி மனமடக்கித் தம்மையண்டித் தொண்டுபுரியும் புண்ணியப்பேறுவாய்த்த அவதரத்து,

    “ஸர்வஸம்ஸாரபேஷஜம் = சர்வ சம்சாரப் பிணிக்கு மருந்தினர்” என்று தரிசனோபநிடதமும் “சிவயேவஸதாத்யேயஸ் ஸர்வஸம்ஸார மோசக: = சிவபெருமானொருவரே சதா தியானிக்கற் பாலர். சர்வ சம்சார பந்தங்களும் நிவிர்த்தியாகும்பொருட்டு” என்று சரபோபநிடதமும் அறைந்தபடி அவர்களது சம்சாரமென்னுங் கடுங்கானகத்தைக் கொளுத்துங் காட்டுத்தீயைப்போல் பிரகாசித்து நிற்பவன் கருணாநிதியாகிய எம் கண்ணுதற்பிரானென்பது வெளிப்பட்டது. அவனுக்கே வைத்தியநாதன் என்னும் நாமமுண்டு.

    ஸ்ரீலஸ்ரீ சிவ அருணகிரி முதலியார் அவர்கள் இயற்றிய திருவாசக விஷயசூசனம் என்னும் நூலில் இருந்து…

  • The Divine Compassion of Śiva: Ācāryas Revealing the Essence of Vedas and Āgamas through Tirumurai and Meykanda Śāstras

    The Divine Compassion of Śiva: Ācāryas Revealing the Essence of Vedas and Āgamas through Tirumurai and Meykanda Śāstras


    TaHiEnFrEs

    ஸ்ரீமத் வேதாகமங்களைக் கற்றுத் தெளிந்துணர, ஒருவனுடைய முழு ஆயுட்காலமும் போதாதபடி, அவை அளவாற் பெருகியிருக்கின்றனவாதலின், கருணைக்கடலாகிய சிவபெருமான், நம்மீது வைத்த பெருங்கருணையினால், சமயக்குரவர்களும், சந்தான குரவர்களும் ஆகிய ஆசாரிய மூர்த்திகளை இந்நிலவுலகில் அவதரிக்கச் செய்து, அவர்கள் வாயிலாகத் திருமுறைகளையும் மெய்கண்ட நூல்களையும் வேதாகம சாரமாக நமக்கு வழங்கியருளினார். இவ்வருளாசிரியன்மார்கள், சீவபோதம் கழன்று சிவபோதமயமாகி நின்றவர்கள் ஆதலின், இவர்களது திருவாக்கு நம்மனைய பசுவாக்குகள் போலாகாது, பதிவாக்காகவே கொள்ளப்பெறும்.

    தருமையாதீனப் புலவர் வயிநாகரம் திரு.வே. இராமநாதன் செட்டியார் அவர்கள் ‘திருமுறைகளும் மெய்கண்ட நூல்களும்’ என்னும் தலைப்பில் வரைந்த கட்டுரையின் ஒரு பகுதி…

  • The Metaphysics of Śiva’s Immanence and Transcendence: Vyāpti, Sakalatva, and Asangatva

    The Metaphysics of Śiva’s Immanence and Transcendence: Vyāpti, Sakalatva, and Asangatva


    TaHiEnFrEs

    மாணவன் : இறைவன் என்னோடு ஒன்றாய் வேறாய் உடனாய் இருக்கிறான் எனில் நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களையும் சிவபெருமானும் அனுபவிப்பானா?

    ஆச்சாரியர் : மாணவனே !
    உன் வயிற்றில் எத்தனையோ புழு பூச்சிகள் கிடந்து உழலுகின்றன.

    அந்த புழு முதலிய சிற்றுயிர்கள் அடைகிற இன்ப துன்பங்களை உன்னுடைய வினைப்பயன் என்று நீ எந்தக் காலத்திலாவது கருதி இருக்கிறாயா ?
    கருதுவது இல்லை தானே?

    அந்த சிற்றுயிர்கள் படும் இன்ப துன்பங்களை நீ அனுபவிப்பது உண்டா ? இல்லை தானே ?

    அது போலத்தான் இறைவனும்.

    சிவ வியாபகத்தின் கீழ் உள்ள உயிர்கள் அனுபவிக்கிற இன்ப துன்பங்களை சிவபெருமான் ஒரு பொழுதும் தான் அனுபவிப்பதில்லை.

    அவன் உயிர்களோடு ஒன்றாய் வேறாய் உடனாய் இருக்கிறான்.

    உயிருக்கு உயிராய் இருந்து உயிர்களைப் பிரிப்பின்றிக் கூடி நிற்கின்றான்.

    ஆயினும் அவற்றின் தன்மை அவனை பற்றாதவாறு நிற்பதால் உயிர்களது இன்ப துன்ப வாதனைகள் எவற்றையும் சிவபெருமான் பற்றுவது இல்லை என்று அறிவாயாக.

    இப்படியாக இறைவன் பற்றற்றவனாய் இருக்கிறான் என்று திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் தனது திருக்களிற்றுப்படியார் எனும் மெய்கண்ட சாத்திரத்தின் 87 ஆவது பாடலில் விளக்கியருளிச் செய்திருக்கிறார்.

    அப்பாடல்,

    உன்னுதரத் தேகிடந்த கீடம் உறுவதெல்லாம்
    உன்னுடைய தென்னாய்நீ உற்றனையோ – மன்னுயிர்கள்
    அவ்வகையே காண்இங் கழிவதுவும் ஆவதுவும்
    செவ்வகையே நின்றசிவன் பால்.

    நன்றி : மாபாடிய உரைவகுப்புக்குழு.

  • The Spiritual Importance of Śiva’s Abodes

    The Spiritual Importance of Śiva’s Abodes


    TaHiEnFrEs

    சிவபெருமான் அநேக ஸ்தலங்களில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கிறதற்குக் காரணமென்ன?

    தேசங்கள் பலவாயிருப்பதனால் அவ்வாறு திருக்கோயில் கொண்டிராவிட்டால் மனிதர்களுக்குச் சிவதரிசனஞ் சித்திப்பது அரிது. பார்வதிதேவியார் பரமசிவத்தை நோக்கிப் பலவிடங்களில் திருக்கோயில் கொண்டு விற்றிருப்ப தென்னவென்று வினவினகாலத்துத் தேசங்கள் தோறும் பரவியிருக்கும் புண்ணியான்மாக்கள் அங்கங்குத் தரிசிக்கும் பொருட்டாக வீற்றிருப்பதாகப் சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.

    சிவபுண்ணியமுண்டாவதற் கேதுவாகிய சிவஸ்தலங்களின்னவென்று எவ்வாறு தெரியும்?

    சைவபுராணத்தில் உள்ள ஸ்தலபுராணங்களினாலும் தேவாரப்பதிகங்களினாலும் தெரியும்.

    ஸ்தலமென்பது தெய்வத்தை வணங்குவதற்கான ஓரிடந்தானே, சிவஸ்தலங்களின் விசேஷமென்னை?

    இவை ஏனைய மதஸ்தர்கள் தங்களிஷ்டப்படிக் கட்டுகின்ற கோயில்போலன்றாம். ஒவ்வொரு ஸ்தலமும் மானதபூஜையின் உண்மையை விளக்கிச் சிவஞானத்தையுண்டாக்குங் கருவியாயிருத்தலையறிக. அவ்வாறே உத்ஸவங்களும் பஞ்சகிருத்தியங்களை யுணர்த்துவனவாம்.

    சைவவினாவிடை நூலில் உள்ள ஸ்தலவியல் பகுதியில் இருந்து…

  • Exploring the Meaning and Benefits of Śrī Pañcākṣara Recitation

    Exploring the Meaning and Benefits of Śrī Pañcākṣara Recitation


    TaHiEnFrEs

    ஸ்ரீ பஞ்சாக்ஷர செபத்தாற் பயன் என்ன?


    ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தின் பொருளை அறிந்து, சிவபெருமான் ஆண்டவன், தான் அடிமையென்னு முறைமையை மனத்தகத்தே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித்துக் கொண்டுவரின், விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தாற் போல, ஆன்மாவினிடத்தே சிவபெருமான் பிரகாசித்து, மும்மலங்களும் நீங்கும்படி ஞானானந்தத்தைப் பிரசாதித்தருளுவர்.

    சிவபெருமானை ஆன்மாக்கள் வழிபடும் இடங்கள் எவை?


    சிவபெருமான், புறத்தே சிவலிங்க முதலிய திருமேனிகளும் குருவுஞ் சங்கமமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், ஆன்மாக்கள் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், ஆன்மாக்கள் அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம்.

    சிவபெருமான் இவ்விடங்களின் நிற்பர் என்றது அவர் எங்கும் வியாபகர் என்றதனோடு மாறுபடுமன்றோ?


    மாறுபடாது; சிவபெருமான், எங்கும் வியாபகமாய் நிற்பினும், இவ்விடங்களின் மாத்திரமே தயிரில் நெய் போல விளங்கி நிற்பர்; மற்றை இடங்களிலெல்லாம் பாலில் நெய் போல வெளிப்படாது நிற்பர்.

    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் இயற்றிய சைவவினாவிடை தொகுப்பு என்னும் நூலில் இருந்து…

  • Śiva as Aṣṭamūrti: The Eightfold Manifestation

    Śiva as Aṣṭamūrti: The Eightfold Manifestation


    TaHiEnFrEs

    சிவபெருமான் அஷ்டமூர்த்தி :

    நமது சமய ஆசாரிய சுவாமிகளான ஸ்ரீமத் மாணிக்கவாசகப்பெருமான் அருளிய திருவாசகத்தில்,

    நிலம்நீர் நெருப்புயிர்
    நீள்விசும்பு நிலாப்பகலோன்
    புலனாய மைந்தனோ
    டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்
    உலகே ழெனத்திசை
    பத்தெனத்தான் ஒருவனுமே
    பலவாகி நின்றவா
    தோணோக்கம் ஆடாமோ

    திருத்தோணோக்கம் – 5.

    சிவபெருமான் ஒருவனே, நிலமும், நீரும் தீயும், வாயுவும், பெரிய ஆகாயமும், சந்திரனும் சூரியனும், அறிவுருவாய ஆன்மாவும் என்னும் எட்டு வகைப் பொருள்களாய் அவற்றோடு கலந்து இருப்பவனாய் ஏழுலகங்களும் திக்குகள் பத்தும் ஆகப் பல பொருள்களாக நின்றருளுகின்றான்.

    உயிர் – காற்று. விசும்பு – ஆகாயம். நிலா – சந்திரன். பகலோன் – சூரியன். புலன் – புலம்; அறிவு; போலி. ஆன்மாவை, மைந்தன் என்றார், புருடன் என்னும் வடநூல் வழக்குப்பற்றி. ஐம்பூதம், இருசுடர், ஆன்மா என்னும் எட்டும் இறைவனுக்கு, அட்ட மூர்த்தம் – எட்டுரு எனப்படுதலின், எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் என்று அருளினார்.

    மற்றொரு சமயாசாரியரான திருநாவுக்கரசர் பெருமானும் இவ்வாறே,

    இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாய்எறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாய்அட்ட மூர்த்தி யாகி (தி.6 ப.94 பா.1) என்று அருளிச்செய்தல் காண்க. `

    ஈறாய்முத லொன்றாய்இரு பெண்ஆண்குணம் மூன்றாய்
    மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்
    ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
    வேறாய்உடன் ஆனான்இடம் வீழிம்மிழ லையே.

    என்ற மற்றொரு சமயாசாரியரான திருஞானசம்பந்தப்பெருமான் திருமொழியை (தி.1 ப.11 பா.2) இங்கு உடன்வைத்து நோக்குக.

    ” ப்ருதிவ்யோ பவ; ஆபச்சர்வ; அக்நேருத்ர; வாயுர்ப்பீம; ஆகாஸஸ்ய மஹாதேவ; சூர்யஸ்ய உக்ர; சந்த்ரஸ்ய சோம; ஆத்மாந; பசுபதி: “

  • The Establishment of Faiths: A Reflection of Śiva’s Divine Compassion

    The Establishment of Faiths: A Reflection of Śiva’s Divine Compassion


    TaHiEnFrEs

    சிவபெருமான்,

    அநாதிகாலத்தில் சமயங்களைச் சிருஷ்டிக்குங்கால் பல சமயங்களைக் கற்பிப்பானேன்?

    ஒரு பள்ளியில் கற்கும் மாணாக்கர்கள் பிறப்பினால் ஒரு தன்மையராயினும் அறிவில் தீவிர, மந்த பேதவிளக்கத்தினால் பல வேறுபாடுடையராய் பல வகுப்பினராய் பிரித்து, அவைகளுக்கேற்ப நுட்பமாயும், பருப்பொருளாகவும் கல்வியைப் பலவிதப்படுத்தி கற்பித்தல் போல மனிதர் பிறப்பினால் ஒரு தன்மையராயினும் பக்குவ பேதம் காரணமாக தீவிரமாகவும் மந்தமாகவும் விளங்கும் அறிவின் தாரதம்மிய விளக்கமுடையராய் இருத்தலின், கிருபாசமுத்திரமாகிய சிவபெருமான் அவரவர் பக்குவ முறைப்படி நுண்பொருள் உடையனவாகவும் பருப்பொருள் உடையனவாகவும் சமயங்கள் பல நிறுத்தியதெனவாகும்.இங்கனம் செய்தல் குற்றமாகாது என்க.

    இச்சமயங்களில் நிற்பவர், அவைகள் சொல்லும் அறங்களை வழுவாது அனுட்டிப்பின், அந்த அனுஷ்டான பலத்தினால்,அதனினும் மேல் சமயம் சார்ந்து, அதிற்கூறிய ஞான சாதனங்களைக் கடைப்பிடித்து, பரமுத்தி அடைவதற்கு வழியாகும்.

    திருவாவடுதுறை ஆதீன வெளியீடான உலகத்தோற்றம்(1951) என்னும் நூலில் இருந்து…

  • Bhaktirasa Stuti: In Praise of Tiruchendur Murugan

    Bhaktirasa Stuti: In Praise of Tiruchendur Murugan


    TaHiEnFrEs

    சீரேறுஞ் செந்தில்வளர் கந்தநாதா
    சிவகுருவே பரஞானச்சுடர் மாமணியே
    பாரேறுங்கீர்த்தி கொண்டறுமாமுகவா
    பாவைகுற வள்ளி தெய்வானை ரமணா
    நீரேறுங் கார்மேனி வண்ணன்மருகா
    நிர்மல பொற்காந்தி திருபன்னீர் புயனே
    மாரேறுந்துய்ய வெண்மலர் தாரணியும்
    மங்களனே நவநீதன் யெனையாள்வாயே.

    அண்டர்களினிடாகற்றக் கருணையோடு
    அவதரித்துமசுரர் குலமறுத்ததீரா
    எண்டிசையுஞ் செங்கோலைச் செலுத்தும் நீதா
    யேழை யென்மனதிலிசைகுடி கொண்டோனே தொண்டனெனைச்சூழ்ந்தமிடிருணபந்தத்தைத்
    தோணியதை நீக்கி பரிபாலித்தாள
    விண்டிடு மென்பண்டு வினைத்தீதறுப்பாய் விமலனே நின்றுணை கைப்பற்றினேனே.

    திருச்செந்தூர் முருகன் புகழ்கீர்த்தனம். (பக்திரஸமான துதி)(1912)

    ஸ்ரீவில்லிபுத்தூர் டிஸ்டிரிக்ட்டு முன்சீப்பு கோர்ட்டு அமீனா திரு என். எஸ். நவநீதகிருஷ்ணய்யரவர்களால் இயற்றப்பெற்றது.