Category: Meykanda Sastras

  • The Importance of Vedic Tradition in Śaivam

    The Importance of Vedic Tradition in Śaivam


    TaHiEnFrEs

    வைதிக சைவம் என்ற பெயரால் பெறப்படும் பொருள் வேத சம்பந்தமான சிவாகமம் என்பதாம். வைதிகம் – வேத சம்பந்தமுள்ளது. * சைவம் – சிவாகமம். எனவே வேத நூலையும் சிவாகம நூலையும் முக்கிய பிரமாணமாகக் கொண்ட ஒரு சிறந்த சமயத்துக்கு வைதிக சைவம் என்ற பெயர் பொருந்துகின்றது.

    ஆன்மாக்கள் எண்ணில்லாதனவாய் அநாதியாய்ப் பல திறப்படப் பந்தித்த பாசத்தடையுடையவைகளாய் இருத்தலின் அவைகளுக்கு முதல்வன் அப்பாசத்தடையால் நேர்ந்த அறியாமையைப் போக்கி அறிவை விளக்குகின்ற போது ஆன்மாக்களுக்கெல்லாம் அறிவு ஒரு தன்மையாக விளங்குவதில்லை. சூரியன் நடு நின்று ஒரே தன்மையாகப் பூதவிருளைப் போக்கிக்கண்ணொளியை விளக்கினாலும் கண்களெல்லாம் ஒரே தன்மையாக விளங்கப் பெறாது தத்தம் தூய்மைக்கு ஏற்றபடி விளங்கப் பெறுவது * கண்கூடு

    இவ்வாறு தம்மைப் பந்தித்த பாச சத்தி பேதத்தால் பல திறப்பட அறிவு விளங்கப் பெற்ற ஆன்மாக்கள் ஓதி உணர்ந்து ஒழுகத்தக்க நூல்களும் பலதிறப்படும் அல்லவா? அவைகளை அருளிச் செய்த முதல்வன் ஆன்மாக்களை இரண்டு பெரும் பகுதிகளாக வகைப்படுத்தி, அவைகளுக்குப் பொதுவாக ஒரு வகை நூல்களையும் சிறப்பாக ஒரு வகை நூல்களையும் அருளிச் செய்தான். • பொது நூல் வேதமெனப் பெயர் பெறும். சிறப்பு நூல் சிவாகமமெனப் பெயர் பெறும். சிவாகமத்துக்குச் சைவம் என்ற பெயரும் உண்டு.

    • “வேத நூல் சைவ நூல்” சித்தியார் 8ஆம் சூத்திரம் செய்யுள் 267ல் சிவாகமங்கள் சைவமென்னும் பெயரால் கூறப்பட்டிருத்தல் காண்க (267) பூதவிருள் – வெளியேயுள்ள இருட்டு.

    அவற்றுள் வேதமானது உலகியலைக் கூறுவது, பொது வகையாக மெய்ந்நெறியாகிய சிவ நெறியையும் அது கூறும், சைவமானது சிவநெறியைச் சிறப்பாக விரித்துக் கூறுவது.

    ** வேத நூல் ஆன்மாக்களுக்கெல்லாம் பொது, சைவ நூல் விளக்கம் மிகுதியுற்ற ஆன்மாக்களுக்கே சிறப்பாக உரியது.

    இக்காலத்தில் ஒரு சிலர் தமது பேதைமையால் வேதத்தை நிந்தித்துப் புறக்கணித்தும், சைவத்தைப் போற்றுவதுபோற் பாவித்து அதன் மூல தத்துவங்களைக் களைந்தும் வருகின்றார்கள். வேறு சிலர் தாங்கள் ஒரு சமயத்தையும் சாராது, சமயாசாரியர்பாற் சமய வுண்மைகளைக் சமய நிச்சயம் செய்ய கேட்டறியாது தான்றோன்றிகளாய்ச் முற்படுகின்றார்கள்.

    கடவுளால் அருளிச் செய்யப்பட்ட வேதத்துக்கு விரோதமாகச் சித்தாந்த சைவம் எவ்விதத்திலும் எப்பொழுதும் இருக்க முடியாது. ஆகையாற்றானே பெரியோர்கள் வைதிகம் என்ற அடைகொடுத்துச் சைவத்தை வழங்கி வந்திருக்கின்றார்கள்.

    “இராஜாங் கத்தில்
    அமர்ந்தது வைதிகசைவம் அழகி தந்தோ”

    • தாயுமான சுவாமி பாடல், ஆகாரபுவனம் 10.
      என்றார் நமது தாயுமானப் பெருந்தகையார்.

    ஆதலால் சைவர் ஒவ்வொருவரும் வேதத்தையும் வேதக் கிரியைகளையும் கைக்கொண்டே சைவநெறியில் சரிக்கவேண்டும் என்பதை வைதிக சைவம் என்ற பெயர் விளக்குகின்றது.

    “உலகியல் வேதநூல் ஒழுக்கமென்பதும், நிலவு மெய்ந்நெறி சிவநெறியதென்பதும்” – என்பது பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் – 820.

    ** “நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும் நிகழ்த்தியது” – என்பது சிவஞான சித்தியார்.

    • கண்கூடு – பிரத்தியக்ஷம்.

    வேதமொடாகமம் மெய்யாம் இறைவனூல், ஓதும் பொதுவும் சிறப்புமென்றுன்னுக – என்பது திருமந்திரம். “ஆரண நூல் பொது சைவம் அருஞ்சிறப்பு நூலாம்” என்பது சிவஞான சித்தியார்.

    வைதிக சைவம் என்னும் தலைப்பில் பஞ்சாக்ஷரபுரம் ஸ்ரீ வாலையானந்த சுவாமிகள்.

  • The Steps of Śiva Pūjā: A Comprehensive Overview

    The Steps of Śiva Pūjā: A Comprehensive Overview


    TaHiEnFrEs

    சிவபூஜை

    சிவபூசையாவது, புட்பம் திருமஞ்சனம் முதலிய உபகரணங்கள் கொண்டு, ஆத்துமசுத்தி தானசுத்தி திரவியசுத்தி மந்திரசுத்தி இலிங்கசுத்தி என்னும் பஞ்ச சுத்திகளும் செய்து, சிவலிங்கத்தின் பீடத்திலே சத்தியாகி சத்தி பரியந்த பதுமமாகிய சிவாசனம் பூசித்து, அதன்மேல் இலிங்கத்திலே வித்தியாதேகமாகிய மூர்த்தியை நியாசஞ்செய்து, அவ்வித்தியாதேகத்துக்குச் சீவனாய் உள்ள நிஷ்களரூபரும் ஞானானந்தமயரும் சருவகர்த்தாவும் சர்வவியாபகருமாகும் பரமசிவனாகிய மூர்த்திமானைத் துவாதசாந்தத்தின் மேலே தியானித்து, முன்னே நியாசஞ் செய்த வித்தியாதேகத்தில் ஆவாகித்து, “சுவாமி, சருவ சகத்துக்கும் நாதரே, பூசையின் முடிவு எதுவரையுமோ அதுவரையும் நீர் பிரீதியுடன் இவ்விலிங்கத்திலே சாந்நித்தியராய் இருக்க வேண்டுகிறேன்.” என்று விண்ணப்பம் செய்து, பூசித்து ஸ்தோத்திரம் பிரதக்ஷிணம் நமஸ்காரம் பண்ணி முடித்தலாம்.

    சண்டேச நாயனார் புராண சூசனத்தில் பண்டிதர் மு.கந்தையா அவர்கள்.

  • The Fivefold Worship of Śiva according to Śivajñāna Siddhiyār

    The Fivefold Worship of Śiva according to Śivajñāna Siddhiyār


    TaHiEnFrEs

    ஞானநூல் தனையோதல் ஒது வித்தல்
    நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா
    ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
    இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை
    ஊனமிலாக் கன்மங்கள் தபம்செபங்கள் தியானம்
    ஒன்றுக்கொன் றுயருமிவை ஊட்டுவது போகம்
    ஆனவையான் மேலான ஞானத்தால் அரனை
    அருச்சிப்பர் வீடெய்த அறிந்தோ ரெல்லாம்

    சிவஞானசித்தியார் – சாதனவியல்-எட்டாஞ் சூத்திரம்(23).

    (கொ – டு) ஊனம் இலா கன்மங்கள் தபம் செபங்கள் தியானம் இவை ஒன்றுக்கு ஒன்று உயரும். போகம் ஊட்டுவது. ஆனவையான் ஞான நூல்தனை யோதல், ஓதுவித்தல், நற்பொருளைக் கேட்பித்தல், நன்றாத்தான் கேட்டல், ஈனம் இலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும் எழில்ஞான பூசை. இறைவன் அடி அடைவிக்கும். வீடு எய்த அறிந்தோர் எல்லாம் மேலான ஞானத்தால் அரனை அருச்சிப்பர்.

    (பொ-ரை.) இறைவனை வழிபடுகின்ற முறை, சிவதருமோத்தரத்திற் கூறியவாறு கன்மயாகம், தவயாகம், செபயாகம், தியானயாகம்,ஞானயாகம் என ஐவகைப்படும். யாகம் என்பது வழிபாடாம். அவற்றுள் குறைவில்லாத கன்மயாகமாவது விடியஐந்து நாழிகைக்குமுன் எழுந்திருந்து செய்யும் சிவ சிந்தனை முதலாகச் சிவபூஜை அக்கினி காரியம் ஈறாகிய செயல்களாம்.

    தவயாகமாவது, சாந்திராயண விரத முதலியவற்றால் சரீரத்தை மெலிவித்தல். செபயாகமாவது, மந்திரங்களை வாசகம், ரகசியம், மானதம் என்னும் முறையில் தத்தம் தகுதிக்கேற்றவாறு செபித்தல். தியான யாகமாவது, இருதய முதலிய தானங்களில் சதாசிவன் முதலிய மூர்த்திகளின் திருமேனிகளைப் பாவித்துத் தியானிப்பது. இந்த நான்கு யாகங்களும் ஒன்றுக்கொன்று உயரும். உயர்தலாவது, பிரபஞ்சப் பற்றுநீக்கத்தைக் குறிப்பதாம். ஆயி’னும் பற்று நீக்கம் அறவே உண்டாகாமையால் அவ்வழிபாடுகள் போகத்தையே கொடுக்கும். போகம் என்பது சாலோகாதி பதமுத்தியாம். இனி ஞானயாகமாவது, ஞான சாத்திரத்தை முன்னொடு பின் மலைவற ஆசிரியனின்றிப் படித்தலும், தான் படித்தபடி பக்குவமுடைய பிறர்க்குப் படிப்பித்தலும், அச்சாத்திரத்துள்ள நன்மையாகிய பொருள்களைத் தமது மதிநுட்பத்தால் ஆராய்ந்து பிறர்க்குச் சொல்லுதலும், இவ்வாறு சொல்லினும் இது ஆராய்ச்சி அறிவேயன்றி யநுபவ அறிவாகாமையால், அவ்வநுபவ அறிவு விளங்கும் பொருட்டு ஞானாசாரியனிடத்து அச் சாத்திரப் பொருளை உபதேச முறையிற் கேட்டலும், கேட்டவாறே குறைவில்லாத அப்பொருளைத் தனித்திருந்து சிந்தித்தலும் என ஐவகைப்படும்.

    இவ்வாறு ஐவகைப்பட்ட அழகிய ஞான யாகம் ஒன்றுமே முத்தியைத்தரும். முத்தியடைய விரும்புவோர் யாவரும் மேம்பட்ட ஐவகையான இந்த ஞான யாகத்தினாலேயே சிவபிரானை வழிபடக்கடவர்.
    (எ-று)

    தெளிதற்கும், நிட்டைக்கும் ஆசிரியன் உபதேசமே யன்றி நூல் வேண்டாமையான், நூலானா கற்பாலனவாகிய ஞான நூல் ஓதல், ஓதுவித்தல், கேட்பித்தல், கேட்டல், சிந்தித்தல் என்னும் ஐந்துமே ஞானயாகமெனப்பட்டது. ஞானாசாரியனிடத்துக் கேட்குமுன்னர்ப் பிறர்க்குச் சொல்லுதல் கூறி யிருத்தலினால், சாத்திரப் பொருளைத் தன்னுடைய நுண்ணறிவால் அறிந்து ‘சொல்லுதல் கூடும் எனவும், அநுபவ முண்டாதற்குரிய அநுசந்தானத்தை ஆசிரியனிடத்து உபதேச முறையால் கேளாதவர் சொல்லாரெனவும் அறிக. உபதேசங்கேட்டு அநுபவம் வந்த பின்னர்ப் பிறர்க்கு உபதேச நெறியைச் சொல்லுங்கால் அச்செயல் நூற்கலப்பால் சிந்தனையுள் அடங்குமாதலின் அக் கேட்பித்தலை வேறு கூறாராயினர், அவ்வுபதேசத்தைச் சிந்தித்தலென்று
    கூறினமையினாலேயே, அநுபவம் வந்த பின்னர்ப் பிறர்க்கு உபதேசிக்கலாமென்பது பெறப்படும். அது சிந்தனையுளடங்குமாதலானன்றோ, வருஞ் செய்யுளில் கேட்டலுக்குப்பின் கேட்பித்தல் கூறாது சிந்தித்தலே கூறப் பட்டதென்க.

    சாந்திராயணமாவது- அமாவாசை முதல் பௌர்ணமி வரை, உண்ணும் அன்னத்தைப் பதினைந்து பங்காக்கி நாளொன்றுக்கு ஒவ்வொரு பங்காகக் குறைத்துண்ணலும், பௌர்ணமி முதல் அமாவாசை வரை அவ் வாறே கூட்டி உண்ணலுமாம்.
    வாசகமாவது – பிறர்க்குக் கேட்கும்படி செபித்தல்.
    ரகசியமாவது – தன் செவிக்குக் கேட்கும்படி செபித்தல்.
    மானதமாவது—அக்கரங்களை மனத்தால் பாவித்தல். முன்னைய
    இரு செபங்களிலும் எண்ணிக்கை கூடும்.
    .மானதத்தில் எண்ணிக்கை கூடாது.

    சிவஶ்ரீ அருணந்தி சிவாசாரியர் அருளிச்செய்த சிவஞானசித்தியார் சுபக்கம் மூலமும்,உரையும் என்னும் நூலில் இருந்து…

    இதற்கு திருக்கைலாய பரம்பரை திருவாவடு துறை ஆதீனத்துத் திராவிட மாபாடிய கர்த்தராகி மாதவச் சிவஞான யோகிகள் அருளிய உரையைத் தழுவி, திருவாவடுதுறை ஆதீன சைவப் பிரசாரகரும் தேவகோட்டை சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கத்துச் சித்தாந்த சாத்திர போதகருமாகிய, தூத்துக்குடி பொ.முத்தையபிள்ளை எழுதிய பொழிப்புரை.

  • The Greatness of Siva Puja

    The Greatness of Siva Puja


    TaHiEnFrEs

    சிவபூஜை

    சிவபூஜை கற்பக மரம் போன்று விரும்பிய அனைத்தையும் தரவல்லது ஆகும். சிவபூசை செய்வது அனைத்து தானங்கள், தருமங்கள், தவங்கள் செய்த பலனையும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனையும் அனைத்து வேள்விகளையும் செய்த பலனையும் ஒருங்கே தருவதாகும். சிவபூசை செய்தவன் வாழ்வின் நிறைவில் சிவகணநாதராகித் தெய்வ விமானத்தில் ஏறி எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து மகிழ்ந்து பின்பு இறைவன் திருவடியில் இரண்டற கலப்பான்.

    திருமுதுகுன்றத்தில் சிவலிங்கத்திற்கு ஒரு கை நீரால் திருமஞ்சனம் செய்து ஒரு மலரைச் சாத்தினால் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்), மகாமேரு, வாரணாசி எனப்படும் காசி, பிரயாகை, கேகைநதிக்கரை, இமயமலை முதலிய மலைகள் முதலியவற்றில் நெடுங்காலம் தவஞ்செய்து தானதருமங்கள் செய்ததற்கு ஒப்பாகும்.

    விருத்தகிரியில் ஒருநாள் சிவபூசை செய்தால் அனைத்து விரதங்களை நோற்றப் பலனும் கோடி அசுவமேத யாகம் செய்த பலனும் உண்டாகும். அத்தலத்தில் சிவபூசை செய்தவனுக்கு இயமவாதனை இல்லை.

    விருத்தகிரியில் சிவபூசை செய்தவன் எந்தப் பதங்களை விரும்பினாலும் அந்தப் பதமும் வரம்பில்லாத செல்வமும் அவனுக்குக் கிட்டும். மேலும் அட்டமா சித்திகளும் ஞானமும் அவனுக்குச் சித்திக்கும்.

    விருத்தாசலத்தில் சிவபூசை செய்தே இந்திரன், பிரமன், திருமால் முதலியோர் தத்தம் பதவிகளைப் பெற்றார்கள். இந்திராணி, சரசுவதி, இலட்சுமி முதலியோர் இங்கு வழிபட்டே முறையே இந்திரன், பிரமன், திருமால் முதலியோர்க்கு நாயகிகள் ஆனார்கள்.

    சிவலிங்க பூஜை செய்து வழிபட்டவர்கள் பதினாறு இந்திரர்களின் ஆயுட்காலம் சாரூப பதத்தில் இருப்பார்கள்.

    ஒருவர் சிவபூசை செய்யக் கண்டு அதை மனதால் பாவித்து (பாவனைப் பூசை) வழிபடுதலும் நல்ல பலன்களை உண்டாக்கும். அப்படிச் செய்தவர்கள் உலகை ஆளும் வெற்றிச் சிறப்பைப் பெற்று வாழ்ந்து நிறைவாக வீடுபேறு அடைவர்.

    துறவிகளும் கூட சிவபூசை செய்பவர்க்கு நிகரானவர் அல்ல. வஞ்சகனாயினும் சிவபூசை செய்தவன் புண்ணியன் ஆவான். அவன் செய்த பாவங்கள் தாமரையிலையும் தண்ணீரும் போல ஒட்டாமல் இருந்து அவனைப் பிரியும். அதனால் சிவ பூசையானது பிறவி எனும் கொடுநோயை நீக்குகின்ற மருத்துவனாகும்.

    காலைப் பொழுதில் சிவபூசை செய்பவர்கள் சொர்க்காதி போகமும், மதியம் செய்பவர்கள் அசுவமேதயாகப் பலனும், மாலை செய்பவர்கள் பாவ விமோசனமும் பெறுவார்கள். பிரதோச காலத்தில் சிவ வழிபாடு செய்பவர்கள் மூன்று காலங்களிலும் சிவபூசை செய்த பலனைப் பெறுவார்கள்.

    ஸ்ரீ ஞானக்கூத்தர் அருளிய விருத்தாச்சல புராணத்தின் உரைநடைச்சுருக்கத்தின் சிவபூஜை மகிமை சருக்கத்தில் இருந்து…

    நூலாசிரியர் : திரு சே.சக்திவேல்.

    வெளியீடு : தருமை ஆதீனம்

  • The Harmony Between Vedas and Āgamas: Primary Scriptures of Śaivam

    The Harmony Between Vedas and Āgamas: Primary Scriptures of Śaivam


    TaHiEnFrEs

    வேதம் சிவாகமம் என்னும் இரண்டும் முதனூல்கள் எனவும், சிவவாக்கெனவும் சைவசமயத்தில் கொள்ளப்படும். சிவபெருமான்
    ஆன்மாக்கள்மேல் வைத்த கருணையினாலே அவை உணர்ந்து உய்யும்பொருட்டு சதாசிவமூர்த்தியாய் வேதங்களையும்,ஆகமங்களையும் பிரதமசிருட்டி ஆரம்பத்திலே அருளிச்செய்தார்.

    வேதம் நான்கும் சதாசிவமூர்த்தியினுடைய தத்புருஷம் முதலிய நான்கு முகங்களினின்றுந் தோன்றியன. ஆகமங்கள் இருபத் தெட்டும் ஈசானமுகத்தினின்றுந் தோன்றியன. வேதம் நீதி நெறியில் நிற்கும் உலகோர் பொருட்டாம். ஆகமம் ஞானநெறியில் நிற்கும் உயர்ந்தோர் பொருட்டாம். வேதம் சூத்திரம் போலவும், ஆகமம் அதன் வியாக்கியானம் போலவும் ஒருவராலேயே அருளப்பட்டமையின் இரண்டும் சமத்துவமுடையன என்பது உணரப்படும்.

    “வேதநூல் சைவநூலென் றிரண்டே நூல்கள்
    வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த நூல்கள்
    ஆதிநூல் அநாதிஅம லன்தருநூ லிரண்டும்
    ஆரணநூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம்
    நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும்
    நிகழ்த்தியது…”

    எனச் சிவஞானசித்தியாரும்,

    “வேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல்
    ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன
    நாதன் உரைஅவை நாடில் இரண்டந்தம்
    பேதம தென்னில் பெரியோர்க் கபேதமே “

    எனத் திருமந்திரமும்,

    “உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும்
    நிலவுமெய்ந் நெறிசிவ நெறிய தென்பதும்”
    எனத் திருத்தொண்டர் புராணமும் கூறுமாற்றால்
    இனிது விளங்கும்.

    சிவபெருமான் அருளிச்செய்த வேதங்கள் பஞ்சபூதங்களையும் உயிர்களையும் தேவர்களையும் பிரமமெனக் கூறுவது என்னையெனின்; அழியாத சிவபெருமானைக் குறித்து வேதங்கள் கூறியவை மாத்திரம் விதிவாதமாம்; ஒழிந்தன முகமனாம்.
    சதுர்வேதங்களாலும் முதற்கடவுள் எனக் கூறப்பட்டவர் சிவபெருமானே என்னும் உண்மை சதுர்வேததாற்பரிய சங்கிரகம்
    முதலிய நூல்களாலே நன்கு உணரப்படும்.

    சிவபெருமானாலே திருவாய்மலர்ந்தருளப்பட்ட வேதம், சுயம்பு என வழங் கப்படுவது சுயம்புவாகிய அப் பரமேசுரனாலே செய்யப்பட்ட காரணம் பற்றியேயாம்.

    சைவ சாஸ்திர பரிபாலனம்(1940) என்னும் நூலில் இருந்து…(சமய சம்பந்தமான மாத வெளியீடு)

    பத்திராதிபர்: யாழ்ப்பாணம் அச்சுவேலி சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்கள்.

  • Iconography of Śiva in Sangam Poetry

    Iconography of Śiva in Sangam Poetry


    TaHiEnFrEs

    சிவபெருமானது உருவ வருணனை

    நுதலது இமையா நாட்டம் – வான் இலங்கு பிறை அன்ன விலங்குவால் வைஎயிறு
    எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடரும் சென்னி
    யாழ்கெழு மணிமிடற்று அந்தணன்
    செவ்வான் அன்ன மேனி
    மார்பினஃதே மையில் நுண்ஞாண்
    கொன்றைத் தாரன் மாலையன் கண்ணியன்
    கையது கணிச்சி மழு வேல்
    சேர்ந்தோள் உமையே வரிகிளர் வயமான் உரிவை உடுத்தவன் ஊர்ந்தது ஏறே

    அகநானூறு கடவுள் வாழ்த்து

    என்ற தொடர்களால் சிவபெருமான் நெற்றிக்கண்ணோடு முக்கண்ணனாய், செஞ்சடையனாய், பிறைசூடியாய், வேதம் ஓதுபவனாய், செம்மேனியின் மார்பில் பூணூல் அணிந்து, கொன்றை சூடி, கைகளில் கணிச்சி, மழு, வேல் இவற்றை ஏந்தி, அம்மையப்பனாய், ஏறு ஊர்பவனாய்ப் புலித்தோலாடையனாய்ச் சான்றோர்கள் உள்ளத்தில் காட்சி வழங்கும் செயல் கூறப்பட்டுள்ளது.

    கறைமிடறு அணியலும் அணிந்தன்று சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப. நீர்அறவு அறியாக் கரகத்தன் (புறநானூறு -1)

    நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் (ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து) என்பனவற்றால், அவன் விடக்கறைபொருந்திய நீலகண்டன், இடபக்கொடியன், நீர்நிறைந்த கமண்டலத்தோடு இருக்கின்றவன், பார்வதியைத் தன் உடம்பின் ஒரு கூறாகக் கொண்டுள்ளவன் என்ற செய்திகள் பெறப்படுகின்றன. பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாகக் கருதப்படும் மருட்பாவில்,

    பொன்னார் எயில் எரி ஊட்டிய வில்லன் குறங்கு அறைந்த வெண்மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா ஈரணிபெற்ற எழில்தகையன் சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக்கடவுள் என அவன் வில்லும் சூலமும் பிடித்து, மணியையும் உடுக்கையையும் ஒலிப்பித்து, இரண்டு உருவிற்கு ஏற்ப ஈரணிகளால் அழகாகக் காட்சி வழங்கும் திறம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பண்டைத் தமிழகத்தில் சிவன் என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரையில் திரு. தி.வே கோபாலையர்.

  • Śivapunya Teḷivu: A Compendium of Offerings to Śivabhaktas and Their Benefits

    Śivapunya Teḷivu: A Compendium of Offerings to Śivabhaktas and Their Benefits


    TaHiEnFrEs

    சிவபுண்ணியத்தெளிவு என்னும் நூலில் கண்டபடி சிவனடியார்களுக்கு கைங்கர்யம் அளிக்கும் பொருட்களும் அதன் பயன்களும்.

    1. கௌபீனம் (கோவணம்) – ஆயிரம் கோடியுகம் சிவலோக வாசம்
      (தெளிவு 125)
    2. கம்பளம் – கம்பளத்தில் உள்ள ஒவ்வொரு
      முடிக்கும் ஒரு கழஞ்சு பொன்
      கொடுத்த பலன் (தெளிவு 126)
    3. புலித்தோல் (அ) மான்தோல் – கம்பளத்திற்குச்சொன்ன பலன்.(தெளிவு 127)
    4. சாமரம், அரிசி, மலர், கனி, தீபம்
      முதலியன – ஒவ்வோர்
      அரிசிக்கும்
      மலருக்கும்
      ஆயிரம் யுகம் சிவபுரத்தில் வாசம்.(தெளிவு 90,91)

    5.சிவலிங்கம் – ஆயிரம்
    கற்பம் சிவலோகவாசம்.
    (தெளிவு 95)

    6.சிவாகமம் – அறியாக் குழந்தைப் பருவம் முதல் செய்த
    கொலைப் பாவங்கள் தீரும்
    (தெளிவு 117).

    1. பாடலம்(நண்பகலில் மலரும் ஒரு வகை மலர்)
      உற்பலம்(குவளை, செங்கழுநீர்ப் பூ, நீலோற்பலம், கருநெய்தல் போன்ற மலர்களைக் குறிக்கும்)
      முதலியன கலந்த
      சுகந்த நீர் – வருணன் பதம் (தெளிவு 132)

    8.கையில்
    அன்பளிப்பு – திருமால் உலகில் உறைதல்
    (தெளிவு 133)

    1. சுக்கு முதலிய
      மருந்துகள் – ஆயிரம் கோடி கற்பம் ஆதவன் உலகு
      (தெளிவு.134).
    2. நோயகல
      மருந்து – நூறுகோடி யுகம் சிவலோக வாசம்.
      (தெளிவு.135).

    11.விபூதிப்
    பெட்டி – தீர்த்தாடனம் செய்த பலன்(தெளிவு 136).

    1. சிவஞானிக்குச் சிவாகம தானம் – சிவானந்தம் பலன் (தெளிவு. 137).
    2. படிப்போர்க்கு ஆமகதானம் – சிவஞானம் பலன் (தெளிவு. 138)
    3. உருத்திராக்க
      மணிமாலை – உருத்திரன் உலகம் (தெளிவு. 139).

    ]5. கைத்தடியும்,
    குடையும் – மனைவியொடு மன்னராய்ப் பிறப்பர்
    (தெளிவு.140).

    1. பாதுகை(காலலணி ) – சிவபுரம் (தெளிவு 141).

  • The Descent of Śivajñāna: From Śrikantha to Meykandar

    The Descent of Śivajñāna: From Śrikantha to Meykandar


    TaHiEnFrEs

    ஸ்ரீகண்ட முதல்வரிடம் ஸ்ரீமத் ஆகமங்களெல்லாங் கேட்டருளிய நந்திபெருமான் ஸ்ரீகண்ட முதல்வரை வணங்கி நின்று, சிவாகமந்தோறுஞ் சரியை முதலிய நாற்பாதங்களுஞ் சிறுபான்மை வேறுவேறாகக் கூறப்பட்டன. அவற்றுள், உண்மையாவது இதுவென்று அருளிச் செய்ய வேண்டுமென இரந்து விண்ணப்பஞ்செய்து வினாயவழிச், சீகண்ட முதல்வர் கருணை கூர்ந்து “நன்றே வினாயினாய்! அநந்ததேவர் எமக்கு அருளிச் செய்தவாறே கூறுகின்றோம்; கேட்பாயாக” என்றருளி,

    “கற்பந்தோறும் படைப்பு வேறுபாடுங் கேட்போர் கருத்து வேறுபாடும்பற்றி அவற்றிற்கு இயையச் சரியை முதலிய மூன்று பாதங்களும் ஆகமங்களின் வெவ்வேறாகக் கூறப்பட்டன. ஆகலான், அவற்றுள், எவ்வாகமத்தின்வழி யார் தீக்கை பெற்றார். அவ்வாகமத்தின் வழி அவர் ஒழுகற்பாலர். இனி, ஞானபாத மாவது பொருட்டன்மை உணர்த்துவதாகலான் அது பலதிறப்படுதல் பொருந்தாமையின், அவையெல்லாந் தூலாருந்ததி முறைமைபற்றிக் கூறப்பட்டன வன்றி மாறு கோளல்ல வென்பது வகுத் துணர்த்துதற்பொருட்டு, இரௌரவாக மத்துட் பன்னிரு சூத்திரத்தாற் கூறப்பட்டது சிவஞானபோதம் என்பதோர் படலம். அது கேட்டார்க்கு எல்லா வாகமப்பொருள்களும் மாறுகோளின்றி இனிது விளங்கும்” எனக் கூறி, அச்சிவஞானபோதத்தை நந்தி பெருமானுக்கு அருளிச்செய்தார்.

    நந்திபெருமானும் அது கேட்ட துணையானே எல்லா ஐயமும் நீங்கி மெய்ப்பொருள் தெளிந்து, பின்னர் அதனைத் தம் மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த சனற்குமார முனிவர்க்கு அருளிச் செய்தார். அவர் தம் மாணாக்கர் பல்ரோருள்ளுஞ் சிறந்த சத்தியஞான தரிசனிகளுக்கு அருளிச்செய்தார். அவர் தம்மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த பரஞ்சோதிமாமுனிகட்கு அருளிச் செய்தார். அவர் தமிழ்நாடு செய்த தவத்தானே திருவெண்ணெய் நல்லூரின் அவதரித் தருளி மெய்யுணர்வின் முற்றுப் பேறுடையராய் எழுந்தருளியிருந்த மெய்கண்டதேவர்பால் வந்து சிவஞான போதத்தை நல்கி, “இதனை ஈண்டுள்ளோர் உணர்ந்து உய்தற் பொருட்டு மொழிபெயர்த்துச் செய்து பொழிப்புமுரைக்க’ என்று அளித்தருளிப் பொழிப்புரைக்குமாறுஞ் சத்தியஞான தரிசனிகள்பால் தாம் கேட்டவாறே வகுத்தருளிச்செய்து நீங்க, அவரும் அவ்வாறே மொழிபெயர்த்துப் பொழிப்புரையுஞ் செய்தருளித், தம்முடைய மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த அருணந்தி குரவர்க்கு அளித்தருளினார். இது நூல் வந்த வரலாறெனக் கொள்க.

    ஸ்ரீமத் மாதவச் சிவஞான முனிவர் அருளிய சிவஞான மாபாடிய சிறப்புப்பாயிரப் பகுதியில் இருந்து…

  • The Supreme Nature of Śiva : The Distinction of Śiva from Trimūrti

    The Supreme Nature of Śiva : The Distinction of Śiva from Trimūrti


    TaHiEnFrEs

    சரம் அசரங்களாகிய உடம்புகளுக்கெல்லாம் சிவபிரான் உயிராதலாலும், உயிரையின்றி உடம்பு இயங்காமையாலும் தனக்கென ஒன்றில்லாதவராகிய சிவபெருமான் தான் போகியாயிருந்து உயிர்களுக்குப் போகங்களை ஊட்டியும், யோகியாயிருந்து உயிர்கள் யோகமாற்றி மெய்ஞ்ஞானம் உற்று உயர்சிவயோகத்தேகமாகி வீடெய்திடச்செய்தும் நிற்பர்.

    நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் யோகிருந்துழி வேட்கைக்குக் காரணமாகிய காமன் இருக்கவும் விட்டுணு முதலிய தேவர்கள் இன்பநுகர்ச்சியின்றி மெலிவுற்றதும், மாலயன் அம்மெலிவு கெடும்படி கருதிக் காமனை ஏவுதல்
    செய்ய அவனை நெற்றிக்கண்ணை விழித்தெரித்து உமாதேவியோடு அவ்வுயிர்களுக்குப் பேரின்பத்தை அருளிச்செய்ததுமாகிய இந்நிகழ்ச்சியே இதற்குச் சான்றென்க.

    இதற்குச்சுருதி,

    “போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரிதல் ஒரார்
    யோகியா யோக முத்தி உதவுதல் அதுவும் ஓரார்
    வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட லோரார்
    ஊகியா மூட ரெல்லாம் உம்பரின் ஒருவ னென்பர் .”

    சிவஞான சித்தியார்.

    இவ்வுண்மைகளைச் சிறிதுமறியாது நமது சிவபெருமானை மும்மூர்த்திகளோடு ஒருவனாக வைத்தெண்ணுவோரை நோக்கி

    “சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று
    நஞ்சம்அஞ்சி
    ஆவஎந் தாய்என் றவிதா விடும்நம்
    மவரவரே
    மூவரென் றேஎம்பி ரானொடும் எண்ணிவிண்
    ணாண்டுமண்மேல்
    தேவரென் றேஇறு மாந்தென்ன பாவந்
    திரிதவரே “

    என வாதவூரடிகளிரங்கிக் கூறிய திருவாக்குமறிக.

    மதுரை திருஞான சம்பந்த சுவரமிகள்‌ ஆதீன வித்துவான்‌ ஸ்ரீமத்‌ சுப்பிரமணியபிள்ளை அவர்கள் இயற்றிய சைவசித்தாந்த விளக்கம் என்னும் நூலில் இருந்து…

  • The Supreme Nature of Śiva Dharma: A Vedic Exposition

    The Supreme Nature of Śiva Dharma: A Vedic Exposition


    TaHiEnFrEs

    தேவர்கள் ஸ்ரீ நந்தியெம்பெருமானிடம், “நந்தியெம்பெருமானே ! சிவத்தியானக்கடலே! ? சிவதர்ம மகிமையை உரைத்தருளுங்களென்று கூற,

    அதற்கு நந்திதேவர் கூறுகின்றார்:

    ஓ தேவர்களே ! அப்புண்ணியத்தைக் கேட்பீர்களாயின் நீங்கள் பேராச்சரியமடைவீர்கள். சிவபூஜாமஹிமை யென்னுஞ்சாகரத்தில் ஓர் சிறிய பிந்துவைக் கூட நீங்களறிந்திலீர். தவத்தால் சித்தகந்தர்வ வித்தியாதரர்களானீர்கள். சிவப்பிரபாவமெனும் ரத்னங்களுக்குச் சிவன் சமுத்திரம் போன்றவராதலால் சிவனே தனது தத்வத்தை யறிவாரன்றி யேனையோர் அறிவதற்கில்லை. நாங்கள் அவர்களுடைய பிரசாதத்தில் ஓர் லேசமே அறிந்தோம். அஃது அப்படியிருக்க மற்றவர்கள் அவரது மகிமையை யறியமுடியுமா? அபூர்வமாகிய ரத்னங்களைச்சம்பாதித்து ஒருவன் தனது வீட்டில் வைத்துக்கொண்டிருப்பதா யெண்ணிக்கொள்வோம். அவ்விரத்னங்களின் மகிமையை யவனறிவானேயன்றி மற்றவெரெவ்வித மறிவார். ரத்னதத்வத்தை அதன் பரீக்ஷகனே யறிவான். எல்லோருமறிவதற்கில்லை. தாக்ஷாயணி வல்லபராகிய அவ்விறைவனே நித்யன், சர்வக்ஞனாதலால் அவனே இத்தத்வத்தையறிவான்.

    ஓ தேவர்களே! சிவ தர்மமெனும் ரத்னம் ரகஸ்யமாய்ச் சாக்கிரதையாய்க் காப்பாற்ற வேண்டியது, அது மிக்க பக்தனுக்கே கொடுக்கவேண்டியது, ரசம் அற்பமாயினும் அபாரமாகிய லோகத்தையும் ஸ்வர்னமாக்குகிறது. அக்னி லேசமாயினும் அது மலைபோன்ற பஞ்சைச் சாம்பராக்குகின்றது. ஔஷதம் சிறிதாயினும் அதனால் மகாவியாதி தொலைகின்றது. கத்தி சிறிதாயினும் கூர்மையாயிருந்தால் பெரிய தேகத்தின் விநாசத்திற்கும் ஹேதுவாகின்றது. இதுபோலவே சிவதர்மம் அற்பமாயினும் பாவமெனும் பெருமலையைப் பொடிப்பொடியாய் உருவிலாமற் செய்து புண்ணியத்தையும் சம்பத்தையும் வளரச் செய்கின்றது. தர்மங்களுக்குள் உத்தம தருமமானது சிவதருமமொன்றே.

    சாம்பவனும் மஹாதேவனுமாகிய சதாசிவனே சர்வதேவ சிகாமணியாய் உள்ளவரென்று கூறுவது போலச் சிவதர்மமே சர்வதர்ம மணியாயுள்ளதென்று வேதங்கூறுகின்றது. சிவதர்மத்திலும் மேலாகிய தருமம் வேறொன்றில்லை இது சத்யம் சத்யம் சத்தியமென்று கைதூக்கிக் கூறுகின்றேன். சிவதர்மத்துக்கு வேறாகிய தருமங்களெல்லாம் தருமாபாசமேயாம். ஓ சுரர்களே! அப்படிப்பட்ட சிவதருமத்தை ஆச்ரயிப்பதினால் யாது பயன்? சிவதருமங்களையறியாது உலகில் ஏனைய தருமங்களையே அநுஷ்டிக்கின்றனர். அதனால் யாது பயனடையக்கூடும்? ரத்னமென்று பிரமித்து வளையற்கற்களை வாங்குவானாயின் அதனால் சிறப்பு உண்டா? அன்றியும் தேவாதிதேவனான இறைவனுக்கு எது பிரியமோ அது தான் மேலாகிய தர்மம். அஃதொழிந்த சதாசாரமுதலிய வெல்லாமப்படியல்ல.

    அறிந்து சிவதர்மஞ் செய்தால் இதன் பயன் வேதங்களாலுங் கூறமுடியாது. அறியாது செய்த சிவபூசையும் சகலாபீஷ்டங்களையுங் கொடுப்பதாகுமென்று சகல வேதங்களுடைய கருத்து. இச்சிவபுண்ணியத்தினால் சிவகணத்தன்மை பெற்று சிவனுக்கு மிக்க பிரீதிகரனாயிருப்பான். தருமங்களுள் உத்தமமான தர்மமானது சனாதனமாகிய சிவதருமமொன்றே.

    சிவரகசியம் மூன்றாம் அம்சம் முப்பதாவது அத்தியாயத்தில் உள்ள சிவதர்ம மஹிமை உரைத்த பகுதியில் இருந்து…