Category: Meykanda Sastras

  • The Harmony Between Vedas and Āgamas: Primary Scriptures of Śaivam

    The Harmony Between Vedas and Āgamas: Primary Scriptures of Śaivam


    TaHiEnFrEs

    வேதம் சிவாகமம் என்னும் இரண்டும் முதனூல்கள் எனவும், சிவவாக்கெனவும் சைவசமயத்தில் கொள்ளப்படும். சிவபெருமான்
    ஆன்மாக்கள்மேல் வைத்த கருணையினாலே அவை உணர்ந்து உய்யும்பொருட்டு சதாசிவமூர்த்தியாய் வேதங்களையும்,ஆகமங்களையும் பிரதமசிருட்டி ஆரம்பத்திலே அருளிச்செய்தார்.

    வேதம் நான்கும் சதாசிவமூர்த்தியினுடைய தத்புருஷம் முதலிய நான்கு முகங்களினின்றுந் தோன்றியன. ஆகமங்கள் இருபத் தெட்டும் ஈசானமுகத்தினின்றுந் தோன்றியன. வேதம் நீதி நெறியில் நிற்கும் உலகோர் பொருட்டாம். ஆகமம் ஞானநெறியில் நிற்கும் உயர்ந்தோர் பொருட்டாம். வேதம் சூத்திரம் போலவும், ஆகமம் அதன் வியாக்கியானம் போலவும் ஒருவராலேயே அருளப்பட்டமையின் இரண்டும் சமத்துவமுடையன என்பது உணரப்படும்.

    “வேதநூல் சைவநூலென் றிரண்டே நூல்கள்
    வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த நூல்கள்
    ஆதிநூல் அநாதிஅம லன்தருநூ லிரண்டும்
    ஆரணநூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம்
    நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும்
    நிகழ்த்தியது…”

    எனச் சிவஞானசித்தியாரும்,

    “வேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல்
    ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன
    நாதன் உரைஅவை நாடில் இரண்டந்தம்
    பேதம தென்னில் பெரியோர்க் கபேதமே “

    எனத் திருமந்திரமும்,

    “உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும்
    நிலவுமெய்ந் நெறிசிவ நெறிய தென்பதும்”
    எனத் திருத்தொண்டர் புராணமும் கூறுமாற்றால்
    இனிது விளங்கும்.

    சிவபெருமான் அருளிச்செய்த வேதங்கள் பஞ்சபூதங்களையும் உயிர்களையும் தேவர்களையும் பிரமமெனக் கூறுவது என்னையெனின்; அழியாத சிவபெருமானைக் குறித்து வேதங்கள் கூறியவை மாத்திரம் விதிவாதமாம்; ஒழிந்தன முகமனாம்.
    சதுர்வேதங்களாலும் முதற்கடவுள் எனக் கூறப்பட்டவர் சிவபெருமானே என்னும் உண்மை சதுர்வேததாற்பரிய சங்கிரகம்
    முதலிய நூல்களாலே நன்கு உணரப்படும்.

    சிவபெருமானாலே திருவாய்மலர்ந்தருளப்பட்ட வேதம், சுயம்பு என வழங் கப்படுவது சுயம்புவாகிய அப் பரமேசுரனாலே செய்யப்பட்ட காரணம் பற்றியேயாம்.

    சைவ சாஸ்திர பரிபாலனம்(1940) என்னும் நூலில் இருந்து…(சமய சம்பந்தமான மாத வெளியீடு)

    பத்திராதிபர்: யாழ்ப்பாணம் அச்சுவேலி சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்கள்.

  • Iconography of Śiva in Sangam Poetry

    Iconography of Śiva in Sangam Poetry


    TaHiEnFrEs

    சிவபெருமானது உருவ வருணனை

    நுதலது இமையா நாட்டம் – வான் இலங்கு பிறை அன்ன விலங்குவால் வைஎயிறு
    எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடரும் சென்னி
    யாழ்கெழு மணிமிடற்று அந்தணன்
    செவ்வான் அன்ன மேனி
    மார்பினஃதே மையில் நுண்ஞாண்
    கொன்றைத் தாரன் மாலையன் கண்ணியன்
    கையது கணிச்சி மழு வேல்
    சேர்ந்தோள் உமையே வரிகிளர் வயமான் உரிவை உடுத்தவன் ஊர்ந்தது ஏறே

    அகநானூறு கடவுள் வாழ்த்து

    என்ற தொடர்களால் சிவபெருமான் நெற்றிக்கண்ணோடு முக்கண்ணனாய், செஞ்சடையனாய், பிறைசூடியாய், வேதம் ஓதுபவனாய், செம்மேனியின் மார்பில் பூணூல் அணிந்து, கொன்றை சூடி, கைகளில் கணிச்சி, மழு, வேல் இவற்றை ஏந்தி, அம்மையப்பனாய், ஏறு ஊர்பவனாய்ப் புலித்தோலாடையனாய்ச் சான்றோர்கள் உள்ளத்தில் காட்சி வழங்கும் செயல் கூறப்பட்டுள்ளது.

    கறைமிடறு அணியலும் அணிந்தன்று சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப. நீர்அறவு அறியாக் கரகத்தன் (புறநானூறு -1)

    நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் (ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து) என்பனவற்றால், அவன் விடக்கறைபொருந்திய நீலகண்டன், இடபக்கொடியன், நீர்நிறைந்த கமண்டலத்தோடு இருக்கின்றவன், பார்வதியைத் தன் உடம்பின் ஒரு கூறாகக் கொண்டுள்ளவன் என்ற செய்திகள் பெறப்படுகின்றன. பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாகக் கருதப்படும் மருட்பாவில்,

    பொன்னார் எயில் எரி ஊட்டிய வில்லன் குறங்கு அறைந்த வெண்மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா ஈரணிபெற்ற எழில்தகையன் சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக்கடவுள் என அவன் வில்லும் சூலமும் பிடித்து, மணியையும் உடுக்கையையும் ஒலிப்பித்து, இரண்டு உருவிற்கு ஏற்ப ஈரணிகளால் அழகாகக் காட்சி வழங்கும் திறம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பண்டைத் தமிழகத்தில் சிவன் என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரையில் திரு. தி.வே கோபாலையர்.

  • Śivapunya Teḷivu: A Compendium of Offerings to Śivabhaktas and Their Benefits

    Śivapunya Teḷivu: A Compendium of Offerings to Śivabhaktas and Their Benefits


    TaHiEnFrEs

    சிவபுண்ணியத்தெளிவு என்னும் நூலில் கண்டபடி சிவனடியார்களுக்கு கைங்கர்யம் அளிக்கும் பொருட்களும் அதன் பயன்களும்.

    1. கௌபீனம் (கோவணம்) – ஆயிரம் கோடியுகம் சிவலோக வாசம்
      (தெளிவு 125)
    2. கம்பளம் – கம்பளத்தில் உள்ள ஒவ்வொரு
      முடிக்கும் ஒரு கழஞ்சு பொன்
      கொடுத்த பலன் (தெளிவு 126)
    3. புலித்தோல் (அ) மான்தோல் – கம்பளத்திற்குச்சொன்ன பலன்.(தெளிவு 127)
    4. சாமரம், அரிசி, மலர், கனி, தீபம்
      முதலியன – ஒவ்வோர்
      அரிசிக்கும்
      மலருக்கும்
      ஆயிரம் யுகம் சிவபுரத்தில் வாசம்.(தெளிவு 90,91)

    5.சிவலிங்கம் – ஆயிரம்
    கற்பம் சிவலோகவாசம்.
    (தெளிவு 95)

    6.சிவாகமம் – அறியாக் குழந்தைப் பருவம் முதல் செய்த
    கொலைப் பாவங்கள் தீரும்
    (தெளிவு 117).

    1. பாடலம்(நண்பகலில் மலரும் ஒரு வகை மலர்)
      உற்பலம்(குவளை, செங்கழுநீர்ப் பூ, நீலோற்பலம், கருநெய்தல் போன்ற மலர்களைக் குறிக்கும்)
      முதலியன கலந்த
      சுகந்த நீர் – வருணன் பதம் (தெளிவு 132)

    8.கையில்
    அன்பளிப்பு – திருமால் உலகில் உறைதல்
    (தெளிவு 133)

    1. சுக்கு முதலிய
      மருந்துகள் – ஆயிரம் கோடி கற்பம் ஆதவன் உலகு
      (தெளிவு.134).
    2. நோயகல
      மருந்து – நூறுகோடி யுகம் சிவலோக வாசம்.
      (தெளிவு.135).

    11.விபூதிப்
    பெட்டி – தீர்த்தாடனம் செய்த பலன்(தெளிவு 136).

    1. சிவஞானிக்குச் சிவாகம தானம் – சிவானந்தம் பலன் (தெளிவு. 137).
    2. படிப்போர்க்கு ஆமகதானம் – சிவஞானம் பலன் (தெளிவு. 138)
    3. உருத்திராக்க
      மணிமாலை – உருத்திரன் உலகம் (தெளிவு. 139).

    ]5. கைத்தடியும்,
    குடையும் – மனைவியொடு மன்னராய்ப் பிறப்பர்
    (தெளிவு.140).

    1. பாதுகை(காலலணி ) – சிவபுரம் (தெளிவு 141).

  • The Descent of Śivajñāna: From Śrikantha to Meykandar

    The Descent of Śivajñāna: From Śrikantha to Meykandar


    TaHiEnFrEs

    ஸ்ரீகண்ட முதல்வரிடம் ஸ்ரீமத் ஆகமங்களெல்லாங் கேட்டருளிய நந்திபெருமான் ஸ்ரீகண்ட முதல்வரை வணங்கி நின்று, சிவாகமந்தோறுஞ் சரியை முதலிய நாற்பாதங்களுஞ் சிறுபான்மை வேறுவேறாகக் கூறப்பட்டன. அவற்றுள், உண்மையாவது இதுவென்று அருளிச் செய்ய வேண்டுமென இரந்து விண்ணப்பஞ்செய்து வினாயவழிச், சீகண்ட முதல்வர் கருணை கூர்ந்து “நன்றே வினாயினாய்! அநந்ததேவர் எமக்கு அருளிச் செய்தவாறே கூறுகின்றோம்; கேட்பாயாக” என்றருளி,

    “கற்பந்தோறும் படைப்பு வேறுபாடுங் கேட்போர் கருத்து வேறுபாடும்பற்றி அவற்றிற்கு இயையச் சரியை முதலிய மூன்று பாதங்களும் ஆகமங்களின் வெவ்வேறாகக் கூறப்பட்டன. ஆகலான், அவற்றுள், எவ்வாகமத்தின்வழி யார் தீக்கை பெற்றார். அவ்வாகமத்தின் வழி அவர் ஒழுகற்பாலர். இனி, ஞானபாத மாவது பொருட்டன்மை உணர்த்துவதாகலான் அது பலதிறப்படுதல் பொருந்தாமையின், அவையெல்லாந் தூலாருந்ததி முறைமைபற்றிக் கூறப்பட்டன வன்றி மாறு கோளல்ல வென்பது வகுத் துணர்த்துதற்பொருட்டு, இரௌரவாக மத்துட் பன்னிரு சூத்திரத்தாற் கூறப்பட்டது சிவஞானபோதம் என்பதோர் படலம். அது கேட்டார்க்கு எல்லா வாகமப்பொருள்களும் மாறுகோளின்றி இனிது விளங்கும்” எனக் கூறி, அச்சிவஞானபோதத்தை நந்தி பெருமானுக்கு அருளிச்செய்தார்.

    நந்திபெருமானும் அது கேட்ட துணையானே எல்லா ஐயமும் நீங்கி மெய்ப்பொருள் தெளிந்து, பின்னர் அதனைத் தம் மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த சனற்குமார முனிவர்க்கு அருளிச் செய்தார். அவர் தம் மாணாக்கர் பல்ரோருள்ளுஞ் சிறந்த சத்தியஞான தரிசனிகளுக்கு அருளிச்செய்தார். அவர் தம்மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த பரஞ்சோதிமாமுனிகட்கு அருளிச் செய்தார். அவர் தமிழ்நாடு செய்த தவத்தானே திருவெண்ணெய் நல்லூரின் அவதரித் தருளி மெய்யுணர்வின் முற்றுப் பேறுடையராய் எழுந்தருளியிருந்த மெய்கண்டதேவர்பால் வந்து சிவஞான போதத்தை நல்கி, “இதனை ஈண்டுள்ளோர் உணர்ந்து உய்தற் பொருட்டு மொழிபெயர்த்துச் செய்து பொழிப்புமுரைக்க’ என்று அளித்தருளிப் பொழிப்புரைக்குமாறுஞ் சத்தியஞான தரிசனிகள்பால் தாம் கேட்டவாறே வகுத்தருளிச்செய்து நீங்க, அவரும் அவ்வாறே மொழிபெயர்த்துப் பொழிப்புரையுஞ் செய்தருளித், தம்முடைய மாணாக்கர் பல்லோருள்ளுஞ் சிறந்த அருணந்தி குரவர்க்கு அளித்தருளினார். இது நூல் வந்த வரலாறெனக் கொள்க.

    ஸ்ரீமத் மாதவச் சிவஞான முனிவர் அருளிய சிவஞான மாபாடிய சிறப்புப்பாயிரப் பகுதியில் இருந்து…

  • The Supreme Nature of Śiva : The Distinction of Śiva from Trimūrti

    The Supreme Nature of Śiva : The Distinction of Śiva from Trimūrti


    TaHiEnFrEs

    சரம் அசரங்களாகிய உடம்புகளுக்கெல்லாம் சிவபிரான் உயிராதலாலும், உயிரையின்றி உடம்பு இயங்காமையாலும் தனக்கென ஒன்றில்லாதவராகிய சிவபெருமான் தான் போகியாயிருந்து உயிர்களுக்குப் போகங்களை ஊட்டியும், யோகியாயிருந்து உயிர்கள் யோகமாற்றி மெய்ஞ்ஞானம் உற்று உயர்சிவயோகத்தேகமாகி வீடெய்திடச்செய்தும் நிற்பர்.

    நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் யோகிருந்துழி வேட்கைக்குக் காரணமாகிய காமன் இருக்கவும் விட்டுணு முதலிய தேவர்கள் இன்பநுகர்ச்சியின்றி மெலிவுற்றதும், மாலயன் அம்மெலிவு கெடும்படி கருதிக் காமனை ஏவுதல்
    செய்ய அவனை நெற்றிக்கண்ணை விழித்தெரித்து உமாதேவியோடு அவ்வுயிர்களுக்குப் பேரின்பத்தை அருளிச்செய்ததுமாகிய இந்நிகழ்ச்சியே இதற்குச் சான்றென்க.

    இதற்குச்சுருதி,

    “போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரிதல் ஒரார்
    யோகியா யோக முத்தி உதவுதல் அதுவும் ஓரார்
    வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட லோரார்
    ஊகியா மூட ரெல்லாம் உம்பரின் ஒருவ னென்பர் .”

    சிவஞான சித்தியார்.

    இவ்வுண்மைகளைச் சிறிதுமறியாது நமது சிவபெருமானை மும்மூர்த்திகளோடு ஒருவனாக வைத்தெண்ணுவோரை நோக்கி

    “சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று
    நஞ்சம்அஞ்சி
    ஆவஎந் தாய்என் றவிதா விடும்நம்
    மவரவரே
    மூவரென் றேஎம்பி ரானொடும் எண்ணிவிண்
    ணாண்டுமண்மேல்
    தேவரென் றேஇறு மாந்தென்ன பாவந்
    திரிதவரே “

    என வாதவூரடிகளிரங்கிக் கூறிய திருவாக்குமறிக.

    மதுரை திருஞான சம்பந்த சுவரமிகள்‌ ஆதீன வித்துவான்‌ ஸ்ரீமத்‌ சுப்பிரமணியபிள்ளை அவர்கள் இயற்றிய சைவசித்தாந்த விளக்கம் என்னும் நூலில் இருந்து…

  • The Supreme Nature of Śiva Dharma: A Vedic Exposition

    The Supreme Nature of Śiva Dharma: A Vedic Exposition


    TaHiEnFrEs

    தேவர்கள் ஸ்ரீ நந்தியெம்பெருமானிடம், “நந்தியெம்பெருமானே ! சிவத்தியானக்கடலே! ? சிவதர்ம மகிமையை உரைத்தருளுங்களென்று கூற,

    அதற்கு நந்திதேவர் கூறுகின்றார்:

    ஓ தேவர்களே ! அப்புண்ணியத்தைக் கேட்பீர்களாயின் நீங்கள் பேராச்சரியமடைவீர்கள். சிவபூஜாமஹிமை யென்னுஞ்சாகரத்தில் ஓர் சிறிய பிந்துவைக் கூட நீங்களறிந்திலீர். தவத்தால் சித்தகந்தர்வ வித்தியாதரர்களானீர்கள். சிவப்பிரபாவமெனும் ரத்னங்களுக்குச் சிவன் சமுத்திரம் போன்றவராதலால் சிவனே தனது தத்வத்தை யறிவாரன்றி யேனையோர் அறிவதற்கில்லை. நாங்கள் அவர்களுடைய பிரசாதத்தில் ஓர் லேசமே அறிந்தோம். அஃது அப்படியிருக்க மற்றவர்கள் அவரது மகிமையை யறியமுடியுமா? அபூர்வமாகிய ரத்னங்களைச்சம்பாதித்து ஒருவன் தனது வீட்டில் வைத்துக்கொண்டிருப்பதா யெண்ணிக்கொள்வோம். அவ்விரத்னங்களின் மகிமையை யவனறிவானேயன்றி மற்றவெரெவ்வித மறிவார். ரத்னதத்வத்தை அதன் பரீக்ஷகனே யறிவான். எல்லோருமறிவதற்கில்லை. தாக்ஷாயணி வல்லபராகிய அவ்விறைவனே நித்யன், சர்வக்ஞனாதலால் அவனே இத்தத்வத்தையறிவான்.

    ஓ தேவர்களே! சிவ தர்மமெனும் ரத்னம் ரகஸ்யமாய்ச் சாக்கிரதையாய்க் காப்பாற்ற வேண்டியது, அது மிக்க பக்தனுக்கே கொடுக்கவேண்டியது, ரசம் அற்பமாயினும் அபாரமாகிய லோகத்தையும் ஸ்வர்னமாக்குகிறது. அக்னி லேசமாயினும் அது மலைபோன்ற பஞ்சைச் சாம்பராக்குகின்றது. ஔஷதம் சிறிதாயினும் அதனால் மகாவியாதி தொலைகின்றது. கத்தி சிறிதாயினும் கூர்மையாயிருந்தால் பெரிய தேகத்தின் விநாசத்திற்கும் ஹேதுவாகின்றது. இதுபோலவே சிவதர்மம் அற்பமாயினும் பாவமெனும் பெருமலையைப் பொடிப்பொடியாய் உருவிலாமற் செய்து புண்ணியத்தையும் சம்பத்தையும் வளரச் செய்கின்றது. தர்மங்களுக்குள் உத்தம தருமமானது சிவதருமமொன்றே.

    சாம்பவனும் மஹாதேவனுமாகிய சதாசிவனே சர்வதேவ சிகாமணியாய் உள்ளவரென்று கூறுவது போலச் சிவதர்மமே சர்வதர்ம மணியாயுள்ளதென்று வேதங்கூறுகின்றது. சிவதர்மத்திலும் மேலாகிய தருமம் வேறொன்றில்லை இது சத்யம் சத்யம் சத்தியமென்று கைதூக்கிக் கூறுகின்றேன். சிவதர்மத்துக்கு வேறாகிய தருமங்களெல்லாம் தருமாபாசமேயாம். ஓ சுரர்களே! அப்படிப்பட்ட சிவதருமத்தை ஆச்ரயிப்பதினால் யாது பயன்? சிவதருமங்களையறியாது உலகில் ஏனைய தருமங்களையே அநுஷ்டிக்கின்றனர். அதனால் யாது பயனடையக்கூடும்? ரத்னமென்று பிரமித்து வளையற்கற்களை வாங்குவானாயின் அதனால் சிறப்பு உண்டா? அன்றியும் தேவாதிதேவனான இறைவனுக்கு எது பிரியமோ அது தான் மேலாகிய தர்மம். அஃதொழிந்த சதாசாரமுதலிய வெல்லாமப்படியல்ல.

    அறிந்து சிவதர்மஞ் செய்தால் இதன் பயன் வேதங்களாலுங் கூறமுடியாது. அறியாது செய்த சிவபூசையும் சகலாபீஷ்டங்களையுங் கொடுப்பதாகுமென்று சகல வேதங்களுடைய கருத்து. இச்சிவபுண்ணியத்தினால் சிவகணத்தன்மை பெற்று சிவனுக்கு மிக்க பிரீதிகரனாயிருப்பான். தருமங்களுள் உத்தமமான தர்மமானது சனாதனமாகிய சிவதருமமொன்றே.

    சிவரகசியம் மூன்றாம் அம்சம் முப்பதாவது அத்தியாயத்தில் உள்ள சிவதர்ம மஹிமை உரைத்த பகுதியில் இருந்து…

  • The Role of Birth in Soul’s Liberation: A Saiddhāntika Explanation

    The Role of Birth in Soul’s Liberation: A Saiddhāntika Explanation


    TaHiEnFrEs

    கடவுள் உயிர்களுக்கு ஏன் பிறப்பைக் கொடுத்தார்? பிறப்பைக் கொடுக்காமல் இருந்தால் உயிர்கள் துன்பத்திற்கு ஆளாகாமல் இருந்திருக்குமே?

    உயிர்கள் அறிவுடையன. அவ்வறிவு அநாதியே – இயல்பாகவே ஆணவமல சத்தியால் மறைக்கப்பட்டிருந்தது.அறிவுடைய உயிர் சிவானந்தத்தைப் பெறுவதற்கு உரியது.அது சிவானந்தத்தைப் பெற முடியாமல் கிடக்கிறதே என்று உயிர்கள் மேல் பெருங்கருணை கொண்டு சிவபெருமான் உயிர்களுக்குப் பிறப்பைக் கொடுத்தார்.

    பிறப்பைக் கொடுக்காமல இருந்திருந்தால் உயிர்கள் ஆணவமல மறைப்பிலேயே கிடக்கும்.அதுவும் அதற்குத் துன்பந்தானே. துன்பம் என்று அறியாமலேயே துன்பத்துள் கிடப்பதும் துன்பமேயாகும்.

    கடவுள் கொடுத்த பிறப்பினால் துன்பம் மட்டும் உண்டாவது இல்லை.இன்ப அனுபவமும் கிடைக்கிறது.நல்வினை செய்யும் வாய்ப்பும் கிடைக்கிறது.ஆணவமல மறைப்பிலிருந்து படிப்படியாக மெல்ல மெல்ல – விடுதலை பெரும் வாய்ப்பும் கிடைக்கின்றது.ஆதலின் பிறப்பினால் உயிர்கள் துன்பத்திற்கு மட்டுமே ஆளாகின்றன என்று கூறுவதற்கு இடமில்லை.

    முனைவர் ரா.வையாபுரி இயற்றிய கடவுள் சில கேள்விகள் – உயிர் சில சிந்தனைகள்(கட்டுரைத் தொகுப்பு) என்னும் நூலில் இருந்து…

  • The Fourfold Path of Jñāna: A Saiddhāntika Perspective On The Nature of Liberation

    The Fourfold Path of Jñāna: A Saiddhāntika Perspective On The Nature of Liberation


    TaHiEnFrEs

    ஞானம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வகைப்படும். அறிதலொப்புமையால் நான்கும் ஞானமேயாம். ஆயினும் அரும்பு, மலர், காய், கனியாதல் போலச் சோபான முறையாகிய தம்முள் வேறுபாட்டான் முறையே ஒன்றற்கொன்று அதிகமாய் நான்காமெண்ணுக் கணின்ற ஞானமே முடிவாகிய ஞானமாம். இந்நான்கினும் அறிவு நுணுகி வர வர அறியாமையாகிய மலமும் அம்முறையே தேய்ந்து தேய்ந்து வரும். இவற்றின் பயனாகிய சாலோக முதலிய நான்கும் முத்தியேயாயினும் ஒன்றற்கொன்று ஏற்றமாய் இறுதிக்கணின்ற சாயுச்சியம் ஒன்றே முடிவாகிய முத்தியாகும்.

          மேற்கூறப்பெற்ற நான்கும் கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டை எனவும் பெயர் பெறும். ஞான நூல்களை ஞானசிரியன் பால் ஓதல் கேட்டல் பிறர்க்கு ஓதுவித்தல் கேட்பித்தல் என்பன கேட்டலாகும். தானும் உடனாயவரோடும் அப்பொருளைச் சிந்திப்பது சிந்தித்தலாம். இவ்வாறு கேட்ட காலத்து முதல்வனியல்பு பொருட்டன்மை பற்றிப் பேதமாய்த் தோன்றிச் சிந்தித்தகாலத்து அபேதமாய்த் தோன்றும். இவ்விரண்டுமின்றி நேரியனும் பரியனுமாயதோர் முறைமை பற்றி எவற்றினும் ஒற்றித்து நின்றே ஒன்றினும் பற்றிலனாய் வேறு தோன்றுவது தெளிதலாம். இவ்வாறு அவனோடு ஏகனாகி நிற்க ஏகதேசச் செலவு இன்றாய் ஒழியும். நிட்டையாவது கரணங்களின் வயத்தனாதலின்றி மேலங்ஙனந் தோன்றிய இறைவனது வியாபகத்தைத் தலைப்பட்டு ஒருவாற்றுனுங் குறைவின்றி இம்மையே சீவன்முத்தனாகி மாசுநீங்கிய வழி ஆடையின் வெண்மை ஆடை முழுதும் விளங்கினாற் போல, இங்குளி வாங்குங் கலம் போலுழல்வதாகிய இவ்வுடம்பு நீங்கப் பெறும் பரமுத்தி நிலையில், வியாபகமென்னும் அறிவு விளங்கப் பெற்று முதல்வனோடு ஒத்து நிற்பன் என்பதாம்.

          இவ்வாறு இருவினையொப்பால் சத்தமாதி விடயத் தன்னியன் பற்று நீங்கும். சத்திநிபாதத்தால் போக போக்கியக் கருவிகளின் செறிவு கழியும். குருவருளால் உருக்கழியும், தீக்ஷையால் சஞ்சித வினை கழியும். ஞான சாதனத்தால் எல்லா யோனிகளிலும் புக்குழல்தல் கழியும். ஞானப் பெருக்கத்தால் பாச அறிவிச்சை செயல்கள் கழியும். இறைவனது ஞான சத்தியால் அநாதி மறைப்பாகிய ஆணவமலமும் வாதனைபற்றி நிகழும் ஆகாமிய வினையும் ஒழியும். கிரியா சத்தியான சஞ்சித வினைக்குப் பற்றுக்கொடுத்து நிற்கும் முன்னிலையாகிய மாயேய மலமும் ஒழியும். உடம்பு முகந்து கொண்ட பிராரத்த கன்மம் அநுபவத்தால் ஒழியும். மும்மல நீக்கத்தால் ஏக தேசத் தன்மை கழியும். வாதனை நீக்கத்தால் விடயந் தன்னியன் நுகர்வது கழியும்.

    இவ்வாறு சகல உபாதிகளும் கழிந்து சிவஞானம் விளங்கப் பெற்று மாணிக்கத்தைச் சார்ந்த படிகம் மாணிக்கமாய் ஒழியாது, மாணிக்கத்தின் ஒளியும் நிறமும் பெற்றுத் தன் ஒளி அதுவதுவாயடங்கி அம்மாணிக்கத்திற்குச் சமமாய் நிற்குமாறு போலத்  தன் குணம் அவையேயாய் அடங்கிப் பரமான்மாவே போல ஒற்றித்து நின்று அப்பரமான்வே தனக்கு விடயமாக அயராவன்பு செய்து சிவாநந்த அநுபவம் பெற்று அந்நிலையிலும் மீளா அடிமையே என்று திருவருள் கண்ணாகத் (தன்முனைப்பின்றி) அநுபூதியிற் காண்பன்.

    ‘சித்தாந்த சைவம்’ என்னும் தலைப்பில் சித்தாந்த ஆசிரியர் சைவத்திரு த. சி. ச. இராமச்சங்கு பாண்டியன் ஐயா அவர்கள் வரைந்த கட்டுரையில் இருந்து ஒரு பகுதி…

  • Transcending the Cycle of Karma : Śiva’s Role in Destroying the Forest of Samsāra

    Transcending the Cycle of Karma : Śiva’s Role in Destroying the Forest of Samsāra


    TaHiEnFrEs

    அறம்பாவமென்னு மருங்கயிற்றாற்கட்டி = புண்ணிய பாவப்பயனென்னும் அரிய கயிற்றினாற்கட்டி.

    இதனால் பரமகருணாமூர்த்தியாகிய பரமேசுவரன் ஆணவவிருளில் அகப்பட்டுழலும் ஆன்மகோடிகளை ஆநந்தபரிதர்களாகச் செய்யத் திருவுளங்கொண்டு இருவினையென்னும் பாசக்கயிற்றினாற்கட்டி ஆட்டுவிக்கின்றானென்பதூஉம், அக்கட்டை அவிழ்க்கும்பேராற்றல் அவ்வமல பரமபதிக்கே இயல்பிலமைந்ததென்பதூஉம் பெறப்பட்டது.

    ஆகலின் எத்திறநற்பயனும் ஏகநாதனாகிய அம்புலியணிந்த பிரானருளாலன்றி ஆன்மாக்களுக்கு எக்காலத்தும் எவ்விடத்தும் அமையாதென்பது திண்ணம்.

    “இரு வினைப்பாசக்கயிற்றின் வழியாட்டுவிப்பானுமொருவனுண்டே தில்லையம்பலத்தே” என்றார் திருவெண்காட்டடிகள்.

    இவ்விரண்டு வினைப் பயன்களே ஒவ்வொரு ஆன்மாவையும் எந்தத்தநுவினும் நீங்காதுபற்றிப் பின்றொடர்ந்து செல்லுமாதலால் ” பற்றித்தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே” என்று மீளவும் அவரே வற்புறுத்தியரு ளினார்.
    சுவேதாசுவதர உபநிடதமும் “பராச்யாம்ச்ச சர்வர்ந் பரிணாமயேத்ய = பழைய வினைகளையெல்லாம் பக்குவப்பட்ட பருவத்துப் பரிணமிக்கும்படிச்செய்து அவைகளின் பயன்களையளிப்பான்.’ என்று கூறிப் போந்தது. அதனால் ஆன்மாக்களீட்டுஞ் சர்வகன்மங்களையும் அவரவர்களே ஏறாமலுங் குறையாமலும் புசிக்கும்படியூட்டி அவர்களுக்குச் சித்தசுத்தி பிறப்பித்து புலனொடுக்கி மனமடக்கித் தம்மையண்டித் தொண்டுபுரியும் புண்ணியப்பேறுவாய்த்த அவதரத்து,

    “ஸர்வஸம்ஸாரபேஷஜம் = சர்வ சம்சாரப் பிணிக்கு மருந்தினர்” என்று தரிசனோபநிடதமும் “சிவயேவஸதாத்யேயஸ் ஸர்வஸம்ஸார மோசக: = சிவபெருமானொருவரே சதா தியானிக்கற் பாலர். சர்வ சம்சார பந்தங்களும் நிவிர்த்தியாகும்பொருட்டு” என்று சரபோபநிடதமும் அறைந்தபடி அவர்களது சம்சாரமென்னுங் கடுங்கானகத்தைக் கொளுத்துங் காட்டுத்தீயைப்போல் பிரகாசித்து நிற்பவன் கருணாநிதியாகிய எம் கண்ணுதற்பிரானென்பது வெளிப்பட்டது. அவனுக்கே வைத்தியநாதன் என்னும் நாமமுண்டு.

    ஸ்ரீலஸ்ரீ சிவ அருணகிரி முதலியார் அவர்கள் இயற்றிய திருவாசக விஷயசூசனம் என்னும் நூலில் இருந்து…

  • The Divine Compassion of Śiva: Ācāryas Revealing the Essence of Vedas and Āgamas through Tirumurai and Meykanda Śāstras

    The Divine Compassion of Śiva: Ācāryas Revealing the Essence of Vedas and Āgamas through Tirumurai and Meykanda Śāstras


    TaHiEnFrEs

    ஸ்ரீமத் வேதாகமங்களைக் கற்றுத் தெளிந்துணர, ஒருவனுடைய முழு ஆயுட்காலமும் போதாதபடி, அவை அளவாற் பெருகியிருக்கின்றனவாதலின், கருணைக்கடலாகிய சிவபெருமான், நம்மீது வைத்த பெருங்கருணையினால், சமயக்குரவர்களும், சந்தான குரவர்களும் ஆகிய ஆசாரிய மூர்த்திகளை இந்நிலவுலகில் அவதரிக்கச் செய்து, அவர்கள் வாயிலாகத் திருமுறைகளையும் மெய்கண்ட நூல்களையும் வேதாகம சாரமாக நமக்கு வழங்கியருளினார். இவ்வருளாசிரியன்மார்கள், சீவபோதம் கழன்று சிவபோதமயமாகி நின்றவர்கள் ஆதலின், இவர்களது திருவாக்கு நம்மனைய பசுவாக்குகள் போலாகாது, பதிவாக்காகவே கொள்ளப்பெறும்.

    தருமையாதீனப் புலவர் வயிநாகரம் திரு.வே. இராமநாதன் செட்டியார் அவர்கள் ‘திருமுறைகளும் மெய்கண்ட நூல்களும்’ என்னும் தலைப்பில் வரைந்த கட்டுரையின் ஒரு பகுதி…