அடியார் இலக்கணம்
நைமிசாரண்ய முநிவர்கள் பத்தர்களுடைய இலக்கணம் எது என்று கேட்கச் ஶூதமுநிவர் கூறுகின்றார் : – தேவர் , அசுரர் , அரக்கர் , இயக்கர் கந்தருவர் , நாகர் , முநிவர் , நரர் ஆகிய எவ்வகையருள்ளும் அடியார்கள் உண்டு . அடியார்களுக்குள் வருணாச்சிரம பேதம் கிடையாது ; யாவரும் மாகேசுரர் .
அடியார்களது அகத்துள் விளங்கும் இலக்கணம் மூன்று – அவைதாம்
(i ) மானத ஜபம் ,
( ii ) மானத சிவபூஜை
( iii ) உள்ளத்தே பரம்பொருள் தோற்றமளித்தல் .
புறத்தே தோன்றும் இலக்கணம் பத்து அவைதாம். :
( 1 ) கண்டம் தழுதழுத்தல் , (2 ) நா அசைதல்
( 3 ) இதழ் துடித்தல்
( 4 ) நடுக்கமுறல்
( 5 ) மயிர் பொடித்தல்
( 6 ) அங்கம் வெதும்பி வியர்த்தல்
( 7 ) தள்ளாடி வீழ்தல்
( 8 ) கண்ணீர் சொரிதல்
( 9 ) இரங்குதல்
( 10 ) ஆர்வத்தால் பரவசப்படுதல் .
இத்தகைய அடியார்கள் புண்ணியர்கள் ; வீடுபேறு பெறுவார்கள் ;
திருநீறும் கண்டிகையும் புனைந்தவர்களிடம் மேற்சொன்ன இலக்கணங்கள் இல்லாவிடினும் , அவர்களைக் கண்டால் அவர்களை வீழ்ந்து வணங்கி உபசார மொழிகளைக் கூறவேண்டும் . சிவாசாரியர்களையும் சிவனடியர்களையும் பணிந்தேத்துபவர் யாராயிருந்தாலும் நோயற்று மக்களுடன் உலகில் பல்லாண்டு வாழ்வர் ; சகல தேவர்களாலும் உபசரிக்கப்பட்டு சிவலோகம் மருவி ஈற்றில் சிவனடி கூடுவர் . சிவபுண்ணியத்தின் மேன்மை யெல்லாம் தேவிக்குச் சிவபிரான் முன்னொரு காலத்தில் கூறியருளினர் . அதிபக்குவர்க்கே சிவபுண்ணியத்தின் மேன்மையைக் கூறலாகும் . சிவபிரான் தேவியின் பொருட்டு உரைத்தது இது என்றால் தமியேனாற் கூற முடியுமோ ?
திரு ஞானவரோதய பண்டாரம் இயற்றிய உபதேச காண்டம்(1950) என்னும் நூலில் இருந்து…
இப்பதிவினை யூடியூபில் கேட்டு இன்புற…