திருமுறைப் பெருமை
திருமுறைகள் ஸ்ரீ ஆளுடைய பிள்ளையார் முதல் ஸ்ரீ அருண்மொழித் தேவர் இறுதியாயுள்ள நாயன்மாராற் கூறி அருளப்பட்டனவேனும், ஸ்ரீ சதாசிவமூர்த்தி பால் நின்று இருக்கு முதலிய வேதங்கள் நான்கையும் காமிகம் முதலிய இருபத்தெட்டு ஆகமங்களையும் தோற்றுவித்தாற் போல, சிவபிரானே அவ்வாளுடைய பிள்ளையார் முதலாயினார் பால் அதிட்டித்து நின்று அத்திருமுறைகளைத் தோற்றுவித்தலான், அவை சிவபிரானால் இயற்றி அருளப்பட்டனவேயாம் என்க. பேயினால் பிடிக்கப்பட்டான் வாய்ச்சொற்கள் எல்லாம் பேயின் சொற்களே யாமன்றி அவன் சொற்கள் ஆகாதவாறு போலச் சிவபிரானால் அதிட்டிக்கப்பட்ட நாயன்மார் வாய்ச்சொற்களாகிய திருமுறைகள் எல்லாம் அச்சிவபிரான் சொற்களே.இதனை,
“எனதுரை தனதுரை யாக நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்” என ஆளுடைய பிள்ளையார் அருளிச் செய்தவாற்றானும் உணர்க.
சிவபிரானுக்கு மந்திரம் தூலசரீரமும் ஆன்மா சூக்கும சரீரமும் சத்தி அதிசூக்கும சரீரமுமாம் எனச் சிவாகமங்கள் ஓதுதலால், அம்மந்திர சொரூபமாகிய வேதங்களின் கண்ணும்,அவற்றின் வேறாகத திருமுறைகளின் கண்ணும் சிவபிரான் விசேட சாந்நித்யம் உற்றிருப்பார் என்க.
யாழ்ப்பாணத்து வண்ணைநகர் ஸ்ரீ சுவாமிநாத பண்டிதர் இயற்றிய திருமுறைப் பெருமை(1911) என்னும் நூலில் இருந்து…