ஒரு வீட்டினுள் கள்ளர் பதுங்கியிருப்பது போல ஆன்மாவினுள் ஈசன் மறைந்திருக்கிறான்.
இறைவனுடைய ஞானத்தினாலேயே இறைவனை யறியவேண்டுமே தவிர மற்ற பசு பாச ஞானத்தால் அறிய முடியாது.
நீர் நிழலானது நீரோடு விரவிநின்று புலப்படாததுபோல ஆன்ம அறிவோடு விரவிநிற்கும் சிவசைதன்னியம் அஞ்ஞானிகளுக்குப் புலப்படாமலிருக்கிறது.
நாம் சிவபிரானை வணங்கினால் அவன் வானவர் நம்மைவந்து வணங்க வைப்பான்.
மரத்தை அசைவித்தால் அதின் நிழலெல்லாம் அசையும் அதுபோல ஈசன் ஆட்டுவித்தால் இவ்வுலகெல்லாம் அவன் வழி யாடாநிற்கும்.
மரத்தின் பொந்துகளில் தேன்கூடு இருப்பதுபோல நமது இருதயக்குகையில் ஈசனென்னும் ஆநந்தத்தேன் இருக்கிறது.
சிறுநெருப்புப் பொறியும் பெரியஊரை அழிக்கும் அதுபோலக் கடவுளுடைய கடைக்கண் பார்வை மலைபோல நின்ற கன்மத்தை அழிக்கும்.
ஒருவட்டத்திற்கு அந்த மாதி காணமுடியாது. அதுபோல ஈசனுக்கு ஆதியந்தமில்லை.
ஈசனருள் இருந்தால் விரும்பியவெல்லாங் கைகூடும்.
சிவபெருமான் திருமேனி செங்கனலையும் செவ்வானத்தையும் ஒத்துத்திகழும்.
ஈசனறிவு சூரியப்பிரகாசம்போலவும், ஆன்மாவின் அறிவு, மின்மினியைப்போலவும், இருக்கின்றன.
பஞ்சேந்திரியங்களுக்குள் கண்சிறந்திருப்பதுபோலப்பஞ்சகர்த்தாக்களுக்குள் சதாசிவம் முதல்வராயிருக்கிறார்.
எருது நினைத்தபடி எருதாளன் பொதியேற்றமாட்டான். அதுபோல ஆன்மாநினைத்தபடி, ஈசன் வினைகூட்டமாட்டான்.
நீரோட்டமானது இடையீடு இல்லாமற் செல்வது போல ஈசனுடைய கருணைவெள்ளமும் இடைவிடாமற் பாய்ந்தோடுகின்றது.
சித்தாந்த ஞானரத்தினாவளி(1906)என்னும் நூலில் திரு பால்வண்ண முதலியார் அவர்கள்.