எல்லாம் சிவன் செயலென்றெண்ணும் இறைபணியில் நில்லாதார் செய்யும் கிரியா யோகங்களால் பிறப்பு அறாதெனக் கூறுகின்றது.
நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும்
சிவஞான சித்தியார்
நாகமுழை புக்கிருந்தும் தாகமுதல் தவிர்ந்தும்
நீடுபல காலங்கள் நித்தரா யிருந்தும்
நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பின்
ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே
எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும்இறை ஞானங்
கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக்
குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பர்.
Transliteration :
Nāṭukaḷiṟ pukkuḻaṉṟum kāṭukaḷiṟ carittum
nākamuḻai pukkiruntum tākamutal tavirntum
nīṭupala kālaṅkaḷ nittarā yiruntum
niṉmalañā ṉattaiyillār nikaḻntiṭuvar piṟappiṉ
ēṭutaru malarkkuḻalār mulaittalaikkē iṭaikkē
eṟiviḻiyiṉ paṭukaṭaikkē kiṭantumiṟai ñāṉaṅ
kūṭumavar kūṭariya vīṭuṅ kūṭik
kuñcitta cēvaṭiyum kumpiṭṭē iruppar.
(கொ-டு) நின்மல ஞானத்தை இல்லார் நாடுகளில் புக்கு உழன்றும் எனவும்,இறை ஞானம் கூடுமவர் ஏடுதரும் மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே எரிபடுவிழியின் கடைக்கே கிடந்தும் எனவுங் கூட்டுக.
(பொ-ரை) மேற் கூறியவாறு இறைபணியாகிய நின்மல ஞானமில்லாதவர் புண்ணிய தேயங்களிற் சென்று புண்ணிய தீர்த்தங்களில் ஆடியும், புண்ணியதலத்தைத் தரிசித்தும், வனத்திற் சென்று கிழங்கு, பழம் முதலியவற்றைப் புசித்தும், மலையிலுள்ள குகையில் யோகத்திலிருந்தும், அந்த யோகப் பயிற்சி வலியினால் பசியினையும், நீர்வேட்கை முதலியவற்றையும் ஒழிந்தும், நெடுங்காலம் மரணமில்லாதிருந்தும், பிறப்பென்னுந் துன்பத்தினின்றும் நீங்கமாட்டார். அவ்விறை பணியில் நிற்போர் இதழ்பொருந்திய மாலையணிந்த கூந்தலையுடைய மங்கையர் கொங்கையிடம் தோயப்பெற்று இன்பம் அநுபவிக்கினும் பிறப்பினின்று நீங்கிப்பெறுதற் கரிய வீட்டினைப் பொருந்திச் சிவந்த குஞ்சிதபாதத்தின் கண் அடங்கி நிற்பர். ஆதலால், எத்துணை நன்மைகளும் இறைபணிக் கிணையாகா. எத்துணைத் தீமைகளும் இதன் பயனைக்கெடுக்க மாட்டாவாம்.(எ—று.)
இதனாலே, இறைபணியில் நிற்பவரது ஆற்றல் கூறியவாறு. ஆற்றல்— எத்துணை நன்மைகளும் இறைபணிக்கியிணையாகாமையும், எத்துணைத் தீமைகளும் அதன் பயனைக் கெடுக்கமாட்டாமையுமாம்.
சிவஶ்ரீ அருணந்தி சிவாசாரியர் அருளிச்செய்த சிவஞானசித்தியார் சுபக்கம் மூலமும்,உரையும்(1926) என்னும் நூலில் இருந்து…
(இதற்கு திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்துத் திராவிட மாபாடிய கர்த்தராகிய மாதவச் சிவஞானயோகிகள் அருளிய உரையைத் தழுவி, திருவாவடுதுறை ஆதீன சைவப் பிரசாரகரும் தேவகோட்டை சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கத்துச் சித்தாந்த சாத்திர போதகருமாகிய, தூத்துக்குடி பொ.முத்தைய பிள்ளை எழுதிய பொழிப்புரை)